சபரிநாதன் கவிதைகள்
காணாமல் போனவர்கள்
பகலெல்லாம் பட்டாம்பூச்சி பிடிக்க
பறந்து திரிந்து
மாலையில் பிடித்த ஒன்றை
இரவில் திறந்துவிட்ட சிறுவன் தான்
பாக்தாத் எண்ணெய்க் கிணறுகளில்
பலியிடுகிறான் உயிர்களை என்று
நீங்கள் சொன்னால்
நம்ப முடியவில்லை என்னால்
இன்று
மந்தையோடு மந்தையாக
மசூதியை இடித்தவன்
அன்று
பக்கத்துவீட்டு பகதூருடன்
நோன்புக் கஞ்சிக்காக
வரிசையில் நின்றான் என்கிறீர்கள்
குத்தியாகிவிட்டது எனக்கு
இரண்டு காதுகளிலும்
ஒருவன் இடுப்பை
இன்னொருவன் பிடிக்க
அவனது இடுப்பை
அடுத்தவன் பிடிக்க
ரயில்வண்டி ஓட்டியவர்கள் இன்று
சாதிச்சண்டையில் செத்தார்களா
நம்பப் போவதில்லை நான்.
அவர்கள்
இவர்களாய்
இருக்கமாட்டார்கள்
எங்கே போயிருப்பார்கள் அவர்கள்
ஒலியேதுமில்லாத ராவொன்றில்
வந்திறங்கிய தேவதை
வெள்ளைச்சிறகில் பூட்டி
வேறு கிரகம் போய்விடுகிறது
அவர்களோடு...
அவர்கள் இடத்தில்
வெடித்து முளைக்கிறார்கள்
பதுங்கியிருந்த இவர்கள்
எல்லாக் குழந்தைகளும்
காணாமல் போய்விட்டனர்.
என்ன செய்ய உத்தேசம்
உங்கள் குழந்தைகளுக்கென்று
வந்து சேரும்
ஒரு ராப்பொழுதில்
தப்பித்தலின் நேரம்
நகரம் அதிர்ந்து கொண்டிருக்கிறது
வெகுதூரத்தில்...
மல்லாந்து கிடக்கும் மேனியில்
முழுதாய் வீழ்ந்த மஞ்சள் வெயில்
ஏனோ எதுவும் செய்யவில்லை
அழித்து திருத்தி
கோலமிடும்
பிஞ்சுப் பெண்ணின்
கைவிரல் தீண்டுகிற போது
அள்ளித் தின்னலாம் மண்ணை
பகலெல்லாம் என்ன செய்திருக்குமென்று
ஊகிப்பதெப்படி?
கூடு திரும்புகின்றன.
பறவைகளை மட்டும்
கடவுள் படைத்திருப்பார்
மேலொரு வண்ணம்
கீழோரு வண்ணம்
நிற்கவா
புறப்படவா
சற்று நேரத்தில்
மொத்தமும் இருண்டுபோகும் என்பதை
நம்பமுடியவில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|