கவிஞர் இலமு எழுதிய ஒளி அவிழும் தருணம்
தி.வ.
மனத்தை நெகிழச் செய்யும் "கவிதாஞ்சலி"க் கவிதையுடன் துவங்குகிறது இத்தொகுப்பு.
'இந்த நிலை மாறாதா - இன்ப நிலை வாராதா' என ஏங்கும் எந்தக் கவிஞனுக்கும் இந்தச் சமூக, அரசியல், பண்பாட்டில் நிலவும் அவலங்கள் மீது கோபம் கொப்பளிக்கவே செய்யும். "ஒளி அவிழும் தருண"த்தில் அதன் தெறிப்புகளாகப் பல கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் இலமு.
"இந்தியா
ஒரு தீபகற்ப நாடல்ல
நான்கு பக்கமும்
வர்ணாசிரமச் சுவர்களால்
சூழப்பட்ட தீவு"
இந்த வர்ணாசிரம எதிர்ப்புக் குரலில் "தீவு" படிமம் பொருத்தமாக அமைந்துள்ளது. அது, வர்ணாசிரம ஆபத்தையும் அழகியலோடு உணர்த்துகிறது.
சமுதாய மேன்மைக்கு எதிரான பலவற்றின் மீதும் கோபம் கொள்கிற இக்கவிஞரின் மனத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை. ஒற்றை ஒற்றைப் பூவாக நூலின் பக்கங்களில் பரவலாகக் காணப்படும் சின்னச்சின்ன காதல் கவிதைகள் -அழகு செய்யப்பட்ட சொற்களாக.
கவிதைகளில் கவிமொழி கச்சிதமாய் அமைந்துள்ளது. தீண்டாமைக்கு எதிராக அது கனலாய் வெளிப்படுகிறது. இலமுவின் கவிதைகளில் உருவகம், படிமம், குறியீடு உண்டுதான். ஆனாலும், படிப்போருக்குக் கவிதையின் பொருளும் சேதியும் உணர்வும் புலப்படாமல் திணறச் செய்கிற இருண்மை உத்தியின் மெத்த மேதாவித்தனம் இல்லை. படிக்கையில், மனத்தைச் சிரமப்படுத்தாத அழகான எளிமை.
வெளியீடு : தடம் பதிப்பகம்
வதிலை
விலை : ரூ.40
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|