ஆதனூர் சோழன் எழுதிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
சோழ.நாகராஜன்
இந்திய விடுதலை மகா யுத்தத்தின் பல்வேறு வடிவங்களுள் மினவும் குறிப்பிடத்தக்கதும், இன்றளவும் கேள்விப்படுகிறபோதெல்லாம் தலைமுறைகள் கடந்து உணர்ச்சியும் உத்வேகமும் அளிப்பதுமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் நடத்திய தன்னலமற்ற போராட்ட வரலாறானது தனித்துவ கம்பீரமிக்கதாகும்.
நேதாஜி என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உடலெங்கும் சிலிர்ப்பு உண்டாகும். அத்தகையதொரு புரட்சி வீரனின் சரித்திர நூல் ஆதனூர்சோழனின் கை வண்ணத்தில் அண்மையில் வெளிவந்துள்ளது. தமிழக மண்ணில் - குறிப்பாகத் தென்னகத்தில் சுபாஷ், போஸ் என்ற பெயர்களைக் கொண்ட தமிழர்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனும் அளவுக்கு சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் தாக்கம் இங்கே குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதை எல்லோரும் அறிவர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எனும் அந்த மகத்தான தலைவனின் பிறப்பு முதல் தமிழில் இதுவரையில் பதிவு செய்யப்படாத அவரின் திருமண வாழ்வு மற்றும் மரணம் வரையிலும் விரிவாகவும், முதல் முறையாகவும் பேசுகிறது இந்நூல்.
மகாத்மா காந்தியின் அன்பையும், விரோதத்தையும், ஒருங்கே பெற்றிருந்த போஸ் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
பிரிட்டிஷார் அவரைப்பிடிக்க வலை வீசிய பொழுது இங்கிருந்து தப்பியவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது விறுவிறுப்பான கற்பனைக் கதைகளுக்கு இணையானது. அவர் ஜெர்மனிக்குச் சென்று அதன் அரசின் உதவியுடன் சுதந்திர இந்தியாவைப் பிரகடனப்படுத்தியதும், வானொலி நிலையம் அமைத்து அதன் மூலம் இந்திய மக்களை உத்வேகமூட்டியதும் வரலாறு. அப்போதுதான் முதன்முதலாக அதிகாரப்பூர்வ வணக்கமாக 'ஜெய் ஹிந்த்' எனும்பதமும், தேசிய கீதமாக தாகூரின் 'ஜனகனமன'வும் முடிவெடுக்கப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக போஸ் உருவாக்கிய ராணுவம் அது தந்த அனுபவம் என்று நூல் விரிகிறது.
ஆஸ்திரியப் பெண் எமிலியுடனான போஸின் காதல் ரசமிக்கது. அவர்களது திருமணமும் அவர்களுக்கு பிறந்த அனிதா எனும் மகளும், பின் நாட்களில் அனிதாவின் இந்திய விஜயமும் அவைபட நூலில் தரப்பட்டுள்ளன.
போஸ் தொடங்கிய ஆசியாவின் முதல் பெண்கள் ராணுவம் குறித்தும் மருத்துவரான தமிழகத்தை சேர்ந்த லட்சுமி அதன் கேப்டனானது பற்றியும் நூல் விவரிக்கிறது.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் இந்தியா நோக்கிப் படையெடுத்து வந்ததும்,அது தோல்வியைத் தழுவிய போதிலும் காவியத் தன்மை கொண்டதாகும். அது அப்பழுக்கற்ற தேச பக்தியினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆதனூர் சோழன் இந்த நூலில் இயன்றவரையில் நேதாஜியின் வாழ்க்கைச் சித்திரத்தை மிக கம்பீரமாகவும், முழுமையாகவும் பதிவு செய்திருக்கிறார். வாசிக்க இலகுவான எளிய நடை. நக்கீரன் பப்ளிகேஷன் நல்லமுறையில் கொண்டு வந்துள்ள நல்ல நூல்.
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்,
105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை-600 014.
விலை ரூ.75/-
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|