கந்தக மலரும் சில கனவுகளும்
அல்லிராஜ், கோவை
வறுமைக் கனலிலிருந்து
தப்பித்து
பட்டாசுத் திரிகளோடு
தொடர்கிறது பள்ளிக்காலம்
கிளையொடிந்த முல்லையாய்...
என்னை
ஏந்திக் கொள்ளாத
வகுப்பறையின் மடி
எதைப் பெறும்?
என்னைவிட மேன்மையாய்...
வேலைக்கிடையில்
கழுவும் தேநீர் டம்ளர்களோடு
எதிரொலிக்கும்
பள்ளித்தோழிகள்
மெல்லுகின்ற மிட்டாயின் ஓசை...
பாடப்புத்தகங்களுக்கு
அட்டைப் போடுகிற
பகல்கனவு நிகழ்வதுண்டு
பட்டாசுகளை ஒட்டும்போது...
பள்ளியெங்கும் மணக்கின்ற
புத்தகங்களின் வாசனை
தொலைதூரமிருப்பதை உணர்வதுண்டு
கந்தகக்காற்றை சுவாசிக்கையில்
பட்டாசுகளைச் சுற்றி
சுற்றியே
பட்டுப்போகிறது
பட்டாம்பூச்சி வயது
பற்றவைத்த சங்குசக்கரமாய்...
அணுகுண்டு,
ராக்கெட்,
டபுள்வெடி என்று
உச்சரிப்பு பழகியிருந்தாலும்
படிக்கின்ற கனவு
புஸ்வாணமாய்...
மறந்துபோன
வானவில்லின் நிறங்களை
ஏக்கத்தோடு தரிசிப்பதுண்டு
ஜொலிக்கின்ற
கம்பி மத்தாப்புக்களில்...
நேற்றுகளின்
துயரங்களைக் கடந்து
சிறுமிக்காலம்
சுருங்கிப் போவதற்குள்
வரவேற்கப்படுவேனா...
ஆரம்பக்கல்விக்கு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|