காஷ்மீர் தேர்தல்
ஆசிரியர் பக்கங்கள்
பயங்கரவாதத்தில் சிக்கித் தவிக்கும் காஷ்மீரில் நடந்த தேர்தலில் மக்கள் 65 சதம் வரை பயமின்றி வாக்களித்தது பலருக்கும் ஆச்சரியமளித்துள்ளது. காஷ்மீரிலும் பிஜேபியின் ஆசை நிறைவேறவில்லை. இதற்காகவே அமர்நாத் யாத்திரை இடப்பிரச்சனையை மையமாக வைத்து ஜம்மு பகுதியில் பெரும் கலவரங்களை நடத்தியது. அதற்கும் 11 சீட்டு மட்டுமே கிடைத்துப் பாடம் கிடைத்துவிட்டது.
தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெரும் கட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு உமர் அப்துல்லா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி. காங்கிரசும் வேறு வழியின்றி உமர் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு வழியாக காஷ்மீர் மதவெறியர்களின் கைகளில் சிக்காமல் தப்பிவிட்டது. தேர்தல் ஆணையமும் திறம்படச் செயல்பட்டது.
பங்களாதேஷ் தேர்தல்
கலிதா ஜியா தலைமையிலான மத அடிப்படைவாத அணி தோல்வியடைந்து ஷேக் ஹசீனாவின் அணி வெற்றி பெற்றுள்ளது. சரிபாதிக்கு மேல் சீட்டுகளைப் பிடித்து ஹசீனாஅணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பங்களாதேசின் ராணுவ ஆட்சியே இத்தேர்தலை நடத்தியுள்ளது. மத அடிப்படைவாதக் கட்சியான ஜமாத் இஸ்லாமிக் கட்சியின் தலைவர் நிஜாமி படுதோல்வியடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ராணுவ ஆட்சி முடிந்து ஜனநாயகம் நமது அண்டை நாட்டில் திரும்பியிருப்பது நல்ல செய்தி.
போர் அபாயம் தணிந்தது
பம்பாய் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒரு போர் வந்துவிடுமோ என்ற நிலைமை உருவானது. குண்டுவெடிப்பு நடத்தி பம்பாய் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் பாகிஸ்தானிகள்தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. உயிரோடு பிடிபட்ட பயங்கரவாதி மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. அவன் குடும்பத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கிடைக்கும் என்பதால் இந்தத் தற்கொலைப் படையில் சேர்ந்ததாய் அவன் கூறியுள்ளான்.
பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தி வந்ததும் உறுதியாகிவிட்டது. இருநாட்டு எல்லைகளிலும் படைகள் குவிக்கப்பட்டதும் பதற்றம் ஏற்பட்டது. இருநாடுகளிலும் மதவெறியர்களைத் தவிர வேறு யாரும் போரை விரும்பவில்லை. இப்போதைக்குப் போர் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது நல்ல செய்திதான்.
இஸ்ரேலின் அட்டூழியம்
இஸ்ரேல் அண்மையில் பாலஸ்தீனத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்துள்ளது. இந்தக் கொடூரத்தை இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் கண்டித்துள்ளன. ஐ.நா. சபைத் தீர்மானத்தை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வேட்டை நாயாய் இஸ்ரேல் உள்ளது. தேர்தல் மூலம் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தேர்தல்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஜனவரி -9ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அஇஅதிமுகவும்-திமுகவும் மோதுகின்றன. அதிமுகவை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளும் கட்சியான திமுக வழக்கம்போல் ரவுடிகளையும் போலீசையும் பணத்தையும் நம்பிக் களமிறங்கியுள்ளது. தொகுதி முழுவதும் திமுக ரௌடித்தனமான தாக்குதல்களை எதிர்க்கட்சியினர் மீது நடத்தி வருவதால் அதிமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|