எஸ்.வி.வேணுகோபாலன் கவிதைகள்
குழந்தைகளுடன் நடைபழகும்
காலைப்பொழுதுகளில்
திரும்பத் திரும்ப
எதிர்ப்படும் முகங்களில்
ஒன்று அவருடையது
மகள்தான் ஒரு நாள்
அடையாளப்படுத்தினாள்
‘நம்ம தாத்தா மாதிரியே இல்ல...’
மாமனாரின் சாயலாய்
அதே வேக நடையை
இளம்தொந்தியை
எதிராளியை இழுத்து வைத்துப்
பேசிவிட்டு நகரும் தோரணையை
வைத்து நானும்
தாத்தாவினது மாதிரியாய்
அன்பு கெழுமிய புன்னகையை
ஆதுரமான சொற்களை
ஓயாத தெருச்சுற்றி அலைதலை
வைத்துப் பிள்ளைகளும்
ஒப்பிட்டுக் கொண்டோம்.
அவருக்கத்தனை கறுப்பில்லை தாத்தா
என்பான் மகன் ஒரு சமயம்
தாத்தா தலைமுடி எங்கே
இந்தாளு வழுக்கை எங்கே
உதட்டைப் பிதுக்குவாள் மகள் ஒரு சமயம்
ஆனாலும், அடுத்த சந்திப்பில்
ரகசிய குரலில் பேசிக் கொள்வார்கள் இருவரும்
தாத்தா மாதிரியான ஆள் போகிறாரென்று
பையன்தான் விசாரித்தறிந்தான்
விசித்திரமான அவரது பெயரை
பாண்டிச்சேரிக்காரரின்
பிரெஞ்சு மொழியிலான
பெயரின் பொருள் தங்கம் என்றும்
துருவித் தெரிந்து வந்தான்
அண்மையில்தான்
இசையமைப்பாளர் என்ற பெயர்ப்பலகையில்
அவர் பெயரை வைத்து
வீட்டைப் பிடித்தோம்
பிறிதொரு நாள்
தாத்தா
மாதிரியிருந்த
மனிதரின் மரணம்
நேற்று முன் தினம்
பழம் வாங்கப்போன ஒருவர்
கடை வாசலிலேயே விழுந்து
இறந்தார் என்று
பேசிக்கொண்டிருந்தது தெரு
‘அமேதே’வின் உடல்
பாண்டிக்கு
எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாகத்
தெரிவித்தது
இசையமைப்பாளரின்
பெயர்ப்பலகை மீதிருந்த
துண்டறிக்கை
நான்காண்டுகளாயிற்று
நள்ளிரவைக் கடந்த ஒரு பொழுதில்
தண்ணீரருந்த எழுந்து
சரிந்தவர்தான்
குழந்தைகளின் தாத்தா
தாத்தாவைப் போன்ற மனிதர்
அதே வயதில்
அதே மாதிரியே
போய்விட்டார் என்று
வருத்தமாய் சமாதானமாயின
குழந்தைகள்....
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|