எழுதல்
மனோந்திரா
நாளை உலகினைத் தோளில் சுமந்திட
நிற்கிற நல்ல இளைஞர்களே!
வேளையிது எழுச்சிகொள் ஏழை எளியோரும்
வாழ்வின் வளங்களைத் துய்த்திடவே!
யோசனை செய்யணும்
பாதையைக் காணணும்
யாவரும் இன்புற்று வாழ்வதற்கே
சாசனம் பண்ணணும்
மக்கள் அனைவர்க்கும்
செல்வம் பொதுவென்று ஆவதற்கே!
சாதி விஷச்செடி சிந்தனைத் தோட்டத்தில்
தோன்ற விடாமல் தடுத்திடணும்!
வீதியில் நின்று நீ நீதியைக் கேட்கிற
வேகம் உனக்குள்ளே வந்திடணும்!
எந்த மதத்தவரும் சொந்த மக்களென
ஏற்க விரும்பும் மனம் வேணும்
நொந்து கிடக்கிற மக்கள் நலம்பெற
நேரம் மறந்து உழைத்திடணும்!
வானில் தெரிகிற நட்சத்திரங்களாய்
மண்ணில் மனிதர்கள் மின்னிடணும்
கூனிக் கிடக்கிற மாந்தர் அனைவரும்
கோட்டம் நிமிர்ந்து எழுந்திடணும்
சுற்றி இருப்பவர் துன்பப் படுவதை
சற்று நிதானமாய்ப் பார்த்திடணும்!
வற்றி வதங்கியே வாடிக் கிடப்போரின்
வேதனை போக்கிட முன்வரணும்!
ஈரம் கசியும் இதயம் இருக்கணும்
ஈனத் தனங்களை மாய்த்திடணும்
பாரம் சுமக்கிற பாமர மக்களின்
பக்க மிருந்து உதவிடணும்!
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|