சி.விநாயகமூர்த்தி கவிதைகள்
குளியல்
குளியல்
காலை நீராட குளம் நோக்கிச் சென்றேன்.
குளம் குளித்துக் கொண்டிருந்தது
சூரிய ஒளி மழையில்.
பனிக்காலம் என்பதால்
நீராட வெந்நீர் வைக்கும்.
குளிக்கும்போது
மின்னும் மீன்களின்
துள்ளல் அழகை கொத்தித் தின்றன
என்விழிக் கொக்குகள்.
தண்ணீர் குளித்த தாமரை இலை
தனக்குத் தானே தலை துவட்டியது
ஈரத் துளிகள் முற்றும் துடைத்து.
குளித்துக் கரையேறிய பின்
நீந்தி நீந்தி மகிழ்கிறேன்
கற்பனையில்.
நம்பிக்கை
மலையளவு குவியும் சோதனைகள்
தொட முடியாத சிகரமாய்
உயர்ந்தாலும்
அதன் உச்சியில் ஊறும்
நம்பிக்கை அருவியால்
வறட்சி தீர்ந்து
பசுமைபாய் விரிக்கும்
துடுப்பிழந்து, கலமிழந்து
நடுப்பகுதியில் திசையிழந்து
தவியாய்த் தவிக்கையில்
நம்பிக்கைக் கரங்கள் விரிந்தால்
நீந்தி நீந்திக் கரைசேர முடியும்
உறவுக் கிளைகள் அனைத்தும் முறிந்து
அடிப்புறம் சாய்ந்தாலும்
நம்பிக்கை வேர்களில் ஈரமிருந்தால்
மறுபடி தழைக்கும் கம்பீரமாய்.
பிரளய வெள்ளம் பெருக்கெடுத்து
அத்தனையும் கொள்ளை போயினும்
நம்பிக்கைக் கிணற்றின் நீரை
துளியும் வற்றடிக்க முடியாது.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|