மழை பூத்த வெளி
பா.உஷாராணி
மழை வருகையிலெல்லாம்
நீ வந்து விடுகிறாய் அல்லது
நீ வரும்போதெல்லாம் மழை வருகிறது...
ஒருவேளை மழை கவர் மரமோ நீ
ஆதியில்...
ஆழ ஆழ வேரோட
அகல அகல கிளை விரிக்க
தாவரங்களுக்கு மழை போலத்தான்
எனக்கும் உனதன்பின் பொழிவு...
தூறலில் கூட
பூமியின் சூடு தணியும் சமயங்களில்...
நான் மட்டுமே அறிந்த
மனசின் வெப்பங்களைத் தணிக்கும்
நீ காட்டும்
சிறுசிறு பிரியங்களின் சாரலும் கூட...
பெய்யும் இடத்திலேயே பிடித்து
நிறுத்த முடியுமா மழையை...
உன்னையும் தான்...
திடுமெனப் பொழிந்து
கோடையை நனைக்கும்
கோடை மழையாய்,
எதிர்பாரா நேரத்தில் இப்போதெல்லாம்
கனவுகளில் வந்து மனசை நனைக்கிறாய்...
எப்படிச் சொல்ல முடியும் அம்மா
நீயும், மழையும் வேறு வேறு என்று...
மெதுவே தழைக்கத்
தொடங்குகிறது அந்தி...
வானத்தைப் பார்க்கிறேன்.
நிர்மலமான ஆகாயம் ஆறுதல் சொல்கிறது...
ஆயினும் அச்சத்தின் தந்தியை மீட்டுகிறது
மரங்களின் நிசப்தம்....
திடுமென மின்னல் துள்ள
இடி முழக்கத்துடன்
மேகங்கள் திரண்டு வந்துவிட்டன
நான் பயந்தபடியே... பதட்டம் கூட
வாசலுக்கு வந்து வந்து போகிறேன்
கனத்த மேகக் கூட்டத்திலிருந்து
மண்ணைத் தொடுகிறது
முதல் மழைத்துளி...
அய்யோ என்ன அவசரம் இப்படி
சற்று பொறு மழையே
பறவைகள்
கூடு திரும்பிக் கொண்டிருக்கின்றன...
தன்னைக் காணாது,
உறக்கத்தின் குகைக்குள் ஓடிவிட்ட
தன் குட்டி சிநேகிதன் வெளியில் வருகையில்,
படபடவென அவன்மேல் பன்னீர் தூவும்
வேடிக்கை நிகழ்வை நிகழ்த்த
காத்திருக்கிறது மழை
வாசல் நந்தியாவட்டைச் செடிக்குள்
தன் நீர்மணிகளைப் பதுக்கிக் கொண்டு...
நகரங்கள், கிராமங்கள்,
வனங்கள், பாலைகள் என
எங்கெங்கும் பொழிந்தாலும்
தலையூற்றின் உயரத்திலிருந்து
நதிகளையெல்லாம்
ஊருக்குள் அழைத்து வந்ததற்காகவே
இந்த மழைக்கு
எப்போதும் தருவேன்
என் கவிதைப் பூச்செண்டு...
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|