ஒபாமாவின் வெற்றி
அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவின் வெற்றி உலக மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. காரணம் ஒரு கறுப்பர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதுதான். ஆனால் அவரது வெற்றிக்கு கறுப்பர் என்பது காரணமல்ல. அக்கிரமத்தின் சின்னமாய்த் திகழ்ந்த ஜார்ஜ் புஷ்ஷின் யுத்த அட்டூழியங்களும், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்ததும் அடிப்படைக் காரணமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் கனவுகள், ஏக்கங்களைப் பிரதிபலித்தார். இதனால் அந்த வாக்காளர்களின் பேராதரவு அவருக்குக் கிடைத்தது. ஒபாமா கறுப்பராக இருந்தாலும் அவரது ஆட்சி எப்படியிருக்கும் என்பது பற்றி பத்திரிகைகள் ஆய்வு செய்கின்றன.
அமெரிக்காவின் வால் தெரு (வால்ஸ்ட்ரீட்) முதலாளிகள்தான் அங்கு ஆட்சிக்கு வரும் அதிபர்களை ஆட்டிப் படைப்பவர்கள் ஜனநாயகக் கட்சி வந்தாலும் குடியரசுக் கட்சி வந்தாலும் குடுமி என்னவோ வால் தெரு முதலாளிகள் கையில்தான். ஆப்கானி°தானிலும், இராக்கிலும் அமெரிக்கா நடத்திய படையெடுப்பை தேர்தல் பிரச்சாரத்தின்போது கடுமையாய்த் தாக்கிப் பேசிய ஒபாமா, வெற்றிக்குப் பிறகு வேறுவிதமாய்ப் பேசி வருகிறார். ஆப்கனிலும், இராக்கிலும் பயங்கரவாதத்திற்கெதிரான பாசறைகள் தொடர்ந்து நீடிக்கும் என்கிறார். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் போர் தொடரும் என்கிறார். ஈரானின் அணு உலைகளை அமெரிக்கா ஏற்க முடியாதென்கிறார். புலியின் உடலின் கோடு மாறினாலும் அதன் குணம் மாறாது போலும். அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து மீண்டும் நிலைபெறச் செய்வேன் என்கிறார், பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியின் கதி
36 ஆண்டுகளாய் இந்திரா காந்தி முதல் ராஜீவ்காந்தி, சோனியா காலம் வரை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மார்க்ரெட் ஆல்வா பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை தேர்தலில் சீட் கேட்பவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுப்பவர்களுக்கே சீட் தரப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கர்னாடகத் தேர்தலில் தனது மகனுக்கே பணம் தராததால் சீட் தரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
நேரு குடும்பத்தில் வாரிசு அரசியல் பரம்பரையாய் பதவி வேட்டையாக நடைபெற்று வருகிறது. இப்போது ராகுல் காந்தி வரை நடக்கும்போது தனது மகனுக்கு சீட் தர மறுத்து விட்டார்களே என்ற ஏக்கம் மார்க்ரெட் ஆல்வாவுக்கு காங்கிரசில் தனிநபர் ஆதிக்கமும் பரம்பரைப் பதவி அரசியலும் புதியதல்ல. நேருவும் இந்திராவும் ராஜீவும் சீட் தருவதற்கே பணம் பெறும் நிலையில் இருந்ததில்லை. இப்போது அது நடக்கிறதே என்ற ஆதங்கம்தான் ஆல்வாவுக்கு. வாரிசு அரசியல் நடத்தும் சோனியா தனது வாரிசுக்கு ஏன் சீட் இலவசமாய் தரவில்லை என்பதே ஆல்வாவின் குற்றச்சாட்டு. வாழ்க வசூல் காங்கிரசின் பரம்பரை அரசியல்.
பிரபாத் பட்னாயக்
உலகப் பொருளாதார மந்தத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்டுள்ள நால்வர் குழுவின் உறுப்பினர் தோழர் பிரபாத் பட்னாயக் 30.10.2008 அன்று ஐ.நா.வின் பொதுச் சபையில் உரையாற்றியுள்ளார். இன்றைய நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அதற்கு விவசாய உற்பத்தி அதிகரித்து விவசாயக் கூலிகளின் பொருளாதாரம் மேம்பட வேண்டும். விவசாயிகளின் வருமானமும் மேம்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திலே மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. அரசாங்கங்களின் நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் விவசாயத்துறை நோக்கித் திருப்பப்பட வேண்டும் என்றும் பிரபாத் பட்னாயக் ஆலோசனைக் கூறியுள்ளார். கார்ப்பரேட் முதலாளிகள் போல அமைச்சர்களுக்கு விவசாயிகள் கமிஷன் தர முடியுமா என்பது தெரிய வில்லை.
மதவெறியரும் குண்டுவெடிப்புகளும்
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம் பயங்கரவாதிகள் மீதே பழி சுமத்தப்பட்டது. இப்போது தான் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் கைவரிசை அம்பலமாகியுள்ளது. பஜ்ரங்தளத்தின் பெண் சாமியார், ஆண்சாமியார் முதல் இந்திய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலாகவுள்ள புரோகித் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவத்திற்குத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளையே இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இத்துடன் இந்திய இராணுவத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அதிகரித்துள்ளதையும் இந்நிகழ்ச்சிகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. மாலேகாவ் குண்டு வெடிப்புக்கு பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் தாகூரும், ஆண் சாமியார் தயானந்த் பாந்தேவும் தலைமையேற்று நடத்தியுள்ளனர். குண்டு வெடித்த பின் சாத்வி தனது சீடர்களிடம் எத்தனை பேர் செத்தார்கள் என்று கேட்டாராம். ஆறு பேர் என்றதும் அவ்வளவுதானா என்று ஆதங்கப்பட்டாராம். எத்தனை கொடூரமனம்! முதலில் பிஜேபி, சாமியார்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றது. இப்போது சாமியார்கள் குற்றமற்றவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் கூறி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்- பிஜேபியின் பரிவாரங்கள்தான் இந்தியாவில் ஒண்ணாம் நம்பர் பயங்கரவாதிகள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது.
தமிழகத்தில் ரேசன் அரிசிக் கடத்தல், மணல் கடத்தல், காடுகளில் மரக்கடத்தல் போன்றவை யாதொரு வில்லங்கமும் இன்றித் தொடர்கிறது.
சட்டக் கல்லூரியில் அராஜகம்
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்துவிட்டுத் தமிழகமே உறைந்து சில்லிட்டும் போய்விட்டது. மயங்கிக் கிடக்கும் மாணவரை உருட்டுகட்டைகளால் தாக்குபவர்கள் மாணவர்களா கூலிப்படைகளா என்பது புரியவில்லை. ஆனால், அக்காட்சிகள் திரைப்படக் காட்சிகளை விடக் கொடூரமானவை. காவல்துறையினர் அதைக் கண்கொண்டு வேடிக்கை பார்த்தது அதைவிடக் கொடுமை.
முதலாளித்துவக் கட்சிகள் கல்லூரிகளுக்குள் ஊடுருவி சாதி மதத்தின் பேரில் மாணவர்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டுக் குளிர்காய்கிறார்கள். சூனியமாய்த் தெரியும் தங்கள் எதிர்காலத்தை எண்ணிக் குமுறிக் கிடக்கும் மாணவர்கள் எளிதில் இந்தச் சுயநல அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாய் சிக்கி விடுகிறார்கள். தமிழகத்தின் தலைநகரில் முதலமைச்சரின் மூக்குக்கு கீழே இரண்டரை மணி நேரம் இந்த ரௌடித்தனம் நிகழ்த்திருப்பது வெட்கக்கேடானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்காட்சியில் பார்வையாளர்களாய் இருந்துள்ளனர். காவல்துறையே வேடிக்கை பார்க்கும்போது பொதுமக்கள் என்ன செய்ய முடியும்?
பள்ளிகளும் கல்லூரிகளும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆயுதப் பயிற்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுவதையும் அரசு வேடிக்கை பார்க்கிறது. சாதி மத அரசியலை மாணவர்களிடம் கொண்டு சென்று ரத்தக்களறிகளுக்குத் தூபமிடும் கயவர்களைக் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மாணவர்கள் தப்ப முடியும். பெற்றோரும் நிம்மதி பெறுவர்.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|