இளமதி பதில்கள்
தீண்டாமை எத்தனை தினுசு
பொதுவாக, முற்போக்கு இயக்கத்திற்குச் சிலர் வருவதும், அதுபோல சிலர் இந்த இயக்கத்தை விட்டுப் போவதும் நடக்கிறது. இதை எப்படி வளர்ச்சியாகக் கருதமுடியும்? - திண்டிவனம் பா.மணி
அரசியல், சமுதாயம் குறித்த முற்போக்கான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட பலர் - குறிப்பாக இளைஞர்கள் முற்போக்கு இயக்கத்திற்கு வருவது என்பது அதிகம். இது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது. இவ்வாறான வருகை அதிகம் என்பதால்தான் முற்போக்கு இயக்கம் இந்தியாவெங்கும் - தமிழ்நாட்டிலும் குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஓர் எடுத்துக் காட்டாக, இடதுசாரி இயக்கத்தின் 61 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால் மட்டுமே மத்தியில் ஐ.மு.கூ. ஆட்சி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்க முடிந்ததும், அந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் கவிழ்ந்து போகும் நிலையில் ஆட்சி அதிரடி ஆட்டம் கண்டதுமான நிகழ்வுகள் எதை உணர்த்துகின்றன?
முற்போக்கு இயக்கத்தின் வளர்ச்சியை - வலிமையை அல்லவா உணர்த்துகின்றன. பிற்போக்குச் சிந்தனைக்கு ஆட்பட்டோ, அல்லது சொந்த குடும்பக் காரணங்களாலோ ஒருசிலர் முற் போக்கு இயக்கத்தை விட்டுப்போகலாம். ஆனால், அதனால் இந்த இயக்கத்தின் வளர்ச்சியோ வலிமையோ குறைந்துவிடப் போவதில்லை. ஏனெனில் முற்போக்கு இயக்கத்திற்கு வருகைதான் அதிகம். வருகையும் செல்கையும் சம அளவில் என்பதாகக் கருதுவது தவறு.
நம் நாட்டில் தீண்டாமை எத்தனை வகை இருக்கிறது? தீண்டாமை என்பது நம் நாட்டில் மட்டும்தானா? பிற நாடுகளிலும் உள்ளதா? - அல்லிராஜ், கோவை.
டீ கடைகளில் இரட்டை கிளாஸ் பாகுபாடு, பொதுப்பாதையிலும் பொதுத் தெருவிலும் நடப்பதற்குத்தடை, காலில் செருப்பு அணியத் தடை, பொதுக்குளங்களில் குளிக்க, தண்ணீர் எடுக்கத் தடை, பொது குடிநீர்க் கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை, ஆண்நாய் வளர்க்கத் தடை... இப்படி, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 160 க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் கோலோச்சுவதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதர வெகுஜன அமைப்புகளும் நடத்திய கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் காணப்படாமல் கணக்குக்கு வராமல் உள்ள தீண்டாமைகள் பலவும் இருக்கக்கூடும்!
தமிழ்நாட்டில் போல் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் பல வடிவங்களிலான தீண்டாமைகள் நிலவவே செய்கின்றன. ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணின் கணவனுக்கு உயிர்போகும் தண்ணீர்த் தாகத்தைத் தணிக்கக்கூட, கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்காத தீண்டாமைக் கொடுமையைச் சொல்லும் பிரேம்சந்த்தின் ஒரு சிறுகதை வடமாநிலங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஒரு நல்ல இலக்கிய சாட்சியாகும். “ஹிந்துக்களாகிய நாம் அவர்களைத் ‘தீண்டாதார்’ ஒன்று சொல்கிறோம். பட்டணம், அல்லது கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடங்களில் அவர்களை ஒதுக்கியும் வைத்திருக்கிறோம்... இன்று நாம் தென்னாப் பிரிக்காவில் தீண்டப்படாதவர்களாக இருக்கிறோம்...
இந்தியாவில் கூலி என்றால் சுமை தூக்குகிறவர், கூலிக்கு வேலை செய்பவர் என்று தான் பொருள். ஆனால் தென்னாப்ரிக்காவிலோ அதற்கு அவமரியாதையான பொருள் இருக்கிறது. ‘பறையன்’, தீண்டாதான் என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொள்கிறோமோ அப்பொருள் தென்னாப்பிரிக்காவில் ‘கூலி’ என்பதற்குக் கொடுக்கப்படுகிறது” -பிரிட்டிஷ் ஆதிக்க காலத்து தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இனத்தவர்களால் அங்கு வாழ்ந்த இந்தியர்களும் தாமும் பட்டதும், கண்ட துமான அனுபவங்களை காந்திஜி இப்படி தம் சுய சரிதையில் சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் மட்டுமன்ன, சமூக ஏற்றத் தாழ்வும் சாதிமுறைமைகளும் நிறவேற்றுமைகளும் நிலவும் எல்லா நாடுகளிலும் தீண்டாமை என்பது பல வடிவங்களில் இருக்கவே செய்கிறது.
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தாழ் நிலையில்தான் வைக்கப்பட்டுள்ளனர். கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு ஒபாமா அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் அங்கே கறுப்பின மக்களெல்லாம் வெள்ளையினத்தவர்க்கு இணையான அந்தஸ்து பெற்றுவிட்டனர் என்பது பொருளல்ல.
ஒரிசாவின் காந்தமால் கலவரத்தை மேற்குவங்க சிங்கூர் கலவரத்துடன் ஒப்பிட்டு பிஜேபி வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறாரோ...? சரியா...? - மு.சுப்ரமணியன், ஈரோடு - 11
முதலில் - காந்தமாலில் நடந்தது இரு தரப்பும் மோதிக் கொண்ட கலவரமல்ல. நக்சல்கள் நடத்திய ஒரு கொடூரக் கொலைச் சம்பவ பழியை கிறிஸ்தவப் பழங்குடி சமுதாயத்தினர் மீது போட்டு அவர்களுக்கு எதிராக வி.எச்.பி., பஜ்ரங்தள் இந்துத்துவா மதவெறிக் கூட்டம் கட்டவிழ்த்துவிட்ட தொடர் கொடூரத் தாக்குதல் நிகழ்வாகும். காந்தமால் மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர் வீடுகளும் தேவாலயங்களும் தாக்கிச் சிதைக்கப்பட்டன. அந்தச் சிறுபான்மைச் சமுதாய மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊர்களை விட்டு காடுகளில் அகதிகளைப் போல் தஞ்சமடைந்தனர். இன்றுவரை அந்த மக்கள் பாதுகாப்பின்றிப் பதட்டத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
மேற்குவங்கத்தின் தொழில் வளர்ச்சியை முடக்கும் நோக்குடன், சிங்கூரில் டாடாவின் சிறிய ரக கார் தொழிற்சாலை அமையவிடாமல் தொடர் கலவரங்களில் ஈடுபட்ட திரிணாமூல் கட்சியுடன் கலவரக் கூட்டணி சேர்ந்தது பிஜேபி. நாட்டில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் வளர்வதும், இடதுசாரிகள் ஆட்சியில் தொழில்கள் வளருவதும் பிஜேபி - ஆர்எஸ்எஸ் பரிவார்களுக்குப் பிடிக்காத ஒன்று. நல்லவை வளர்வது தங்களுக்கு நல்லதல்ல என்பது இவர்கள் எண்ணம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை ஓய்ந்து, அமைதியான இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? தீர்வுதான் என்ன? - ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர்
முதலில் உடனடியாக அரசாங்கம் - எல்.டிடிஇ இருதரப்பும் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்.
தமிழ்மக்களின் பாதுகாப்பான - அமைதி யான வாழ்க்கைக்கு இரு தரப்புக்கும் பொறுப்பு உண்டு. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ்மக்கள் வாழும் பகுதியில் அதிக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி நிர்வாகம் அமையப்பெற வேண்டும். இந்த ஏற்பாடு தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கு வழி திறக்கும். குண்டுச் சத்தங்களும் உயிரிழப்புகளும் இல்லாத - அதிக அதிகாரங்களும் உரிமைகளும் கொண்ட அமைதியான வாழ்க்கைக்கு இந்த அரசியல் ஏற்பாடே ஆக்கப்பூர்வமானதாய் இருக்கும்.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|