கலைகளில் ஆதி
தமிழகத்தின் நிகழ் கலைகளில் தொன்மையானது என்று கும்மி அடித்தலைக் கூறலாம். இசைக் கருவிகள் தோன்றும் முன்னரே உருவான கலை. இன்றுவரை கும்மி அடிப்பதற்கு இசைக் கருவிகள் கிடையாது. ஆதிமனிதன் உழவுத் தொழிலைத் தொடங்கியவுடன் கும்மி ஆட்டம் தோன்றியிருக்கக் கூடும். இதனுடைய அசைவுகள் அனைத்தும் நன்செய் விவசாயத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளதை ஊன்றிப் பார்த்தால் காண முடியும். விதைத்தல், நாற்று நடுதல், அறுவடை, கதிர் அடித்தல் போன்ற செயல்களில் காணப்படும் உடல் அசைவுகளைக் கும்மியிலும் காணலாம். மிழகத்திலும், கேரளத்திலும் பரவலாகக் காணப்படும் கலை இது. தமிழகத்தில் பொங்கல், காணும் பொங்கல் போன்ற கலாச்சார விழாக்களிலும், பெயர் சூட்டல், பூப்புனித நீராட்டுவிழா, திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் கோவில் திருவிழாக்களிலும் கும்மியடிப்பதைக் காண முடியும். கேரளத்தில் ‘கைகொட்டிக்களி’ மற்றும் ‘திருவாதிரைக்களி’ என்றும் இதை அழைக்கிறார்கள். ஓணம், திருவாதிரை விழாக்களில் கேரள நங்கையர் ஆடி மகிழும் கலை இது.
மகளிர் மட்டுமே ஆடி மகிழும் கலைகளில் இதுவும் ஒன்று. ஆடவர் கண்டு ரசிக்கலாம். பெண்கள் வட்டமாக நின்று கைகளைத்தட்டி ஒலி எழுப்பி அதற்கேற்ப உடல் அசைவுகளை நடத்தி ஆடுவர். இதற்கென்று மக்கள் மனம் கவரும் ஒய்யாரமான மெட்டுக்களுடன் பாடல்கள் உண்டு. விழாவின் பொருளுக்கேற்ப பாடல்கள் பாடப்படும். குழுவில் ஒரு பெண் அடியெடுத்துப் பாட மற்றவர்கள் பின்பாட்டு பாடுவார்கள். இந்தப் பாடலின் மெட்டுக்கேற்ப கைகளைத் தட்டி தாளம் எழுப்பி வட்டமிட்டு ஆடி வருவார்கள்.
இதற்கென்று தனி உடைகள் கிடையாது. கோலாட்டம் போன்று ஆடுவோர் இரட்டை எண்ணிக்கையில் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. ஒருசிறு குழு தொடங்கி வைத்தால் போதும் புதிது புதிதாகப் பெண்கள் இணைவதும் களைத்தவர் வெளியேறுவதும் நடக்கும். பாவாடை சட்டையுடன் சிறுமியரும், பாவாடை, ரவிக்கை, அரை தாவணியுடன் கன்னியரும், சேலை அணிந்த மாதரும் வயது வேறுபாடின்றிப் பங்கேற்கும் கலை இது.
கும்மிகளில்பல நடைமுறைகள் உண்டு, விரல் தட்டு, உள்ளங்கை தட்டு, அஞ்சலி தட்டு மற்றும் முழங்கை தட்டு என்ற பல செய்முறைகள் பழக்கத்தில் உள்ளன. கும்மிகளில் பலவகை உண்டு. பூந்தட்டுக் கும்மி, தீப கும்மி, குலவை கும்மி, கதிர் கும்மி, முளைப்பாரி கும்மி என்று பல வகைகள் உண்டு. நாளடைவில் இதற்கென்று இலக்கியங்களும் உருவாகி விட்டன. வள்ளியம்மன் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, பஞ்சபாண்டவர் கும்மி, வைகுந்தர் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபதேச கும்மி என்று பலவகை கும்மி இலக்கியங்கள் உருவாகியுள்ளன.
“கும்மி யடிதமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகண் டோமென்று கும்மியடி
ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி
வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”.
என்பதும்
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”
என்பதும் மகாகவி பாரதியாரின் கும்மிப் பாடல் வரிகள்.
நாட்டுப்புற இசைப் பாடலாகிய கும்மிக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இயற்கும்மி, ஒயிற்கும்மி என கும்மிப்பாடல் இருவகையான பாவடிவம் அமையப் பெற்றுள்ளது.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|