வேதனை
பாரதி கண்ணம்மா
வாழைப்பூ சிறகுக்குள்
சிசுக் கை
பிஞ்சு விரல்களாய்
ஒடுங்கிக் கிடக்கும்
பூ நரம்புகளைக்
கிள்ளி எறியும் போதும்....
மூலிகை சிற்றரசி
அரைக் கீரையின்
இடையூறும்
பூ மகுடங்களுடன்
கட்டைத் தண்டு
செங்கோல் அகற்றி
பரிபாலனம் செய்யும் போதும்...
மண் மாதாவின்
பச்சை நரம்புகளாய்
மண்டிக் கிடக்கும்
முருங்கைக் கீரைகளை
குச்சி கொப்பின்றி
உருவும் போதும்....
மோர்த் தடாகத்தில்
வெள்ளிக் கெண்டைகளாய்
துண்டு துண்டாய் ஊறும்
வாழைத் தண்டுகளிடையே
பருத்திக் குச்சியின்
சிலுவை மத்து சுழற்றி
நார் களையும் போதும்....
வெங்காயக் குன்றின்
தோல் மேகத் துகிலுரிய
எனது விழிப் பொய்கைகளில்
எரிச்சல் ஊற்றெடுக்கும் போதும்...
முப்பதாண்டுக் கால
அரசுப் பணியின் போது
நாக்கு ருசித்த
சமையலுக்குப் பின்னிருந்த
என் மனைவியின்
அன்றாட வேதனை தெரிகிறது.
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|