மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!
நாடே வெட்கித் தலைகுனியும் அளவுக்குக் கேவலங்களின் அறங்கேற்றமாக நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பெனும் நாடகம்.
அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்குச் சாவு மணியடிப்பதற்குத்தான் வழிவகுக்கும் என்பதால் மத்திய அரசை ஆதரித்து வந்த இடதுசாரிகள் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தனர். இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்திவந்தனர். ஆனால் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுபற்றியும், அதனால் நாட்டுமக்களின் தாங்கெணாத துன்ப துயரங்கள் பற்றியும் எந்த அக்கறையும் காட்டாத மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, பணவீக்கத்தின் காரணமாக நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவிட்ட கடும் நெருக்கடிகளுக்கு எந்தப் பரிகாரத்தையும் செய்ய முன்வராத நிலையில் அமெரிக்காவுடனான இந்த அடிமை சாசனத்தில் கையொப்பமிடவே பெருவிருப்பம் காட்டிவந்தது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, அதை ஏற்பதனை நெருங்கிய நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் தங்களது ஆதரவினை விலக்கிக்கொள்வதென்ற நியாயமான முடிவை எடுத்தன. இதன் தொடர்ச்சியாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் அவசியம் மத்திய அரசுக்கு ஏற்பட்டு, அதற்காக வரலாறு காணாத இழிசெயல்களிலெல்லாம் கூச்ச நாச்சமின்றி ஈடுபட்டது. எதிர்க்கட்சிகள் மற்றும் உதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விலைக்கு வாங்கியது.
நாட்டின் குடிமக்களுக்கு ஆதரவாக, அவர்களின் வளர்ச்சியில் அக்கறையாக இருக்க வேண்டிய ஒரு மத்திய அரசு அதற்கு மாறாக அமெரிக்காகவுக்கு அடிமையாவதையே தனது ஒரே லட்சியமாகக் கருதிச் செயல்பட்டிருப்பது மிகவும் வெட்கக் கேடானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். இத்தனை நாடகங்களையும் நமது நாட்டின் மின்சாரத் தேவை கருதியே அரங்கேற்றுவதாகக் கூறிக்கொள்கிறது மத்திய அரசு. நமது நாட்டில் நீர்வீழ்ச்சிகள் மூலம் தான் நீண்டகாலம் மின் உற்பத்தி செய்தோம். அனல் மின் நிலையங்களை அமைத்தோம். அண்மைக்காலமாக காற்றாலைகள் மூலமும், சூரிய வெப்பத்திலிருந்தும் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இவைபோக இயற்கை எரிவாயுவைக் கொண்டும் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தியாவின் மொத்த மின் தேவை 3.7லட்சம் மெகாவாட் என்கிறார்கள். இதில் நீர் மின்சாரம் 25சதவீதம், அனல் மின்நிலையங்கள் மூலம் 43 சதவீதம் உற்பத்தியாகிறது. கூடங்குளம் இயங்கத் துவங்கினால் 5 சதவீதம் அதிகரிக்கும். நமது உள்நாட்டு வளங்களின் மூலம் மின் உற்பத்தி செய்வது என்பதுதான் சிறந்த முறையாகும்.
அமெரிக்காவுடன் சீனாவும், ரஷ்யாவும் அனுசக்தி ஒப்பந்தம் செய்திருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஹைடு சட்டமோ, 1 2 3 யோ இல்லை. இவைதான் நம்மை அடிமைகொள்ளும் சட்டங்கள். மன்மோகன்சிங் தனது அமெரிக்க விசுவாசத்தால் இந்தச் சட்ட வலைகளுக்குள் இந்தியாவைச் சிக்க வைக்கும் இந்தத் துரோக நடவடிக்கையை எப்படிச் சகித்துக் கொள்ளமுடியும்?
மன்மோகன் அரசு இப்போது தப்பிப் பிழைத்துவிட்டாலும் இது ஒரு தற்காலிக வெற்றியாகத்தான் இருக்கமுடியும். இதற்காக நடந்த கேலிக்கூத்துகளை மௌனசாட்சியாக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தேசத்தின் ஜனநாயக மாண்புகளின் முதுகில் குத்தியிருக்கும் மத்திய ஆட்சியாளர்களை அவர்கள் மன்னிக்கப்போவதில்லை.
- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|