நசுங்குறோமே...
- விழுதுகள் ரெ.வெள்ளைச்சாமி
நாட்டுக்கு முதுகெலும்பு
நாங்கன்னுதான் சொல்லுறாங்க
எங்க முதுகெலும்பொடிச்சு
மூலையில தள்ளுறாங்க
விவசாயி - நாங்க விவசாயி
கந்துவட்டிக்கு கடனை வாங்கி
நொந்து கெடக்கும் சம்சாரி
ஆழ உழுதுநட்டு அடிக்கடி உரம்போட்டு
புதுசா மாத்தி மாத்தி
பூச்சிக்கெல்லாம் மருந்தடிச்சு
வெள்ளம் வந்தா அழுகிப்போகும்
இல்லையின்னாப் பட்டுபோகும்
இதுக்கெல்லாம் தப்பி வெளைஞ்சா
எங்க உசுரு திரும்பி வரும்
பாருக்கெல்லாம் படியளப்பான்
பரமனுன்னு சொல்லுறாங்க
பரமனுக்கும் படையல் போட
படியளப்பது நாங்க
வாரியில மண்ணெடுத்து
வக்கணையா எலைபோட்டு
எங்களுக்குப் படியளந்தது
எந்தச் சாமி சொல்லிப்புடுங்க
பண்ணையாரு சொல்லிவிட்டா
வங்கி வந்து லோனு கொடுக்கும்
மந்திரிக்கும் மொதலாளிக்கும்
மறுக்காமக் கடன் கெடைக்கும்
நாங்க மட்டும் உள்ள போனா
நாட்டாமை மேனேஜரு எங்களை
நாயைப் போல நெனைச்சு
வெரட்டி வெளியே தள்ளுறாரு
கந்துக் கடன் அடைக்காம
வங்கிக் கடன் கெடைக்காம
கதவிடுக்கில் மாட்டிக்கிட்ட
கைபோல நசுங்குறோமே
வெளைய வச்ச பொருளுக்கெல்லாம்
வெலைவைக்க முடியாம
வெட்டி எங்க உரிமைகளைப்
பொதச்சதாரு சொல்லிப்புடுங்க.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|