ந.பெரியசாமி கவிதைகள்
ஈன்ற பின் விழும்
செத்தையைக் கூட காக்கும் நம்முன்
உடல் கிழித்து எறியப்படுவர்
பச்சிளங் குழந்தைகளும்
உடலெங்கும் ஊறும் காமத்தால்
கண்களில் குறி முளைக்க
வன்புணர்ச்சிக்கு உள்ளாகிடுவர்
பிணமான பெண்களும்
கிஞ்சித்தும் பரிதாப உணர்வற்றதின்
அழிவின் எச் செய்கையாலும்
அடைந்ததில்லை எவ்வெற்றியும்
உருக்கொண்ட மக்களின் எழுச்சியே
உருவாக்கியுள்ளன விடுதலைகளை
பின் நகர்ந்த காலங்கள்
கற்பித்த நிதர்சனங்களை
பொசுக்கி புதைகுழியிலிட்டு
சந்தேகத்தின் பெயராலென
களையெடுப்பதாக
பயிர்களைப் பிடுங்கும் காவல்துறையும்
அருகிலிருக்கும் வீட்டினுள்
அலைவுறும் பூனைகளையும்
அச்சத்தோடு நோக்கச் செய்யும் ஊடகங்களும்
மாற்றங்கொள்ளாதிருக்க...
விளைவிக்க வெடிப்புறும் நிலத்தினுள்
பதுக்கிய கண்ணிவெடிக்கோ
களிப்புறும் கேளிக்கையின் போதோ
விஷக் கிருமிகளால் பிணிதாக்கியோ
பயணத்தின் நிறைவில் உறைந்து கிடக்கையில்
அன்பைச் சுரக்க போதிக்கும்
ஆலய வழிபாட்டின் போதோ
நாமும் விழிபிதுங்கி உடல் பிய்ந்து கிடப்போம்
யாரோ யாருக்காகவோ
தீட்டப்படும் சதிக்கு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|