எங்கெங்கு காணினும்....
மஞ்சுளா
காடெங்கிலும் மலைகள்
மலையெங்கிலும் அருவிகள்
ஊரெங்கிலும் ஆறுகள்.... குளம்... குட்டைகள் என
எல்லாம் நிரம்பி வழிய
மினுங்காத ஓடைகள் சலசலத்து
சிறுவர் சிறுமிகளை
விளையாட அழைக்க
மேகங்கள் மழைநீரை
மொழிபெயர்க்க
அவற்றை நதிகள் கைப்பற்றிக் கொண்டிருக்க
ஒளியை விழுங்கிய மரங்கள்
நீரின் அர்த்தங்களை
கிளைகளின் இலைகளில்
நரம்புகளால் எழுத
பூக்கள் நீரின் சுவையைத் தேனாக்கி
வண்டுகள் பருகக் கொடுக்க
இரை தேடும் மான்களும்
மற்றுமுள்ள விலங்குகளும்
நீர் பற்றிய தேடுதலின்றி (கிறக்கமின்றி)
கானகத்தே மகிழ்ந்து திரிய
ஆங்காங்கே ஏரிப் பறவைகளின்
அலகுகளில் ஏறிய மீன்களும்
தன் பிறவிப் பயன் அதுவென பாட
ஊரெங்கும் மழைத்தோகை
உயிரெங்கும் மயில்தோகை
விரிந்தாட.. விரிந்தாட
எங்கெங்கு காணினும் நீரடா
என்ற உலகம் கண்டு
கண்ணுறக்கம் கலைந்தெழுந்த போது
கையில் மினரல் வாட்டர் பாட்டில்களும்
காலிக் குடங்களுமாக
அலைந்து கொண்டிருந்தனர்
எங்கள் ஊர்ப் பெண்கள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|