காலம்
களப்பிரன்
தூங்கவைக்கும் அவதியும் அசதியும்
சில காலமாய்
துயிலெழுப்பும் கடிகாரங்களாகிப் போயின
தத்துவமும் அரசியலும் நிரம்பி வழியும்
எனது நூலக அலமாரியின் இடுக்குகளிலிருந்து
ஒருசில கவிதையும், இலக்கியமும் மட்டுமே
இப்போதெல்லாம் எகிறிக் குதிக்கின்றன
போக்குவரத்து நெரிசல் மிகுந்த
என் வேலை முறையோ
கொஞ்சநாளாய்
பயணிக்கவே அனுமதி கேட்டு
காத்து நிற்கின்றது
மணிக்கணக்கில் பேசிப்பறக்கும்
என் மனமோ
சில நிமிடங்களைக் கூட கடத்தத் தெரியாமல்
சிறைப்பட்டுப் போகின்றது
சாதாரணச் சொற்களைக் கூட
கோர்த்துக் கொடுப்பது நீயானால்
பலவிதமாய் அர்த்தப்படுத்தும்
அகராதியாய் நான் உருமாறுவதோடு
என் இயல்பும் சமன் குலைந்து போகிறது
சில நேரங்களில் அந்த
அகராதியின் அத்துமீறல்களோ
பதில்களற்ற உன்னுடைய
மௌனத்துக்குள்ளும்
ஊடுருவி என்னை உருக்குலைக்கிறது
இத்தனை விதமான கொடுமைகளால்
எல்லா நாளையும் உருமாற்றி
நீயே தான்
என் முன்னே அமர்ந்திருக்கிறாய்
இறுதித் தீர்ப்புச் சொல்லும்
நீதி தேவதையாகவும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|