அலையும் காலம் - போடி மாலன்
போடி மாலன் அபூர்வமாக அதே நேரத்தில் நுட்பமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். செம்மலர் ஏட்டில் பல சிறுகதைகளை எழுதியுள்ள இவர் "அலையும் காலம்"என்ற நாவலை எழுதியுள்ளார். 1970களில் எழுதத்துவங்கிய இவரின் இந்த நாவலும் அப்போதே வந்திருக்கவேண்டியது என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
"அலையும் காலம்" நாவலின் களம் வித்தியாசமானது. ஆனால் வாலிபத்தை கடந்து வருகிற அனைவரும் சந்தித்தே தீரவேண்டியது. வாழ்க்கையில் இலக்கு வேண்டும் என்று கூறுவது எளிது. ஆனால் பல நேரங்களில் வாழ்க்கை நூலறுந்த பட்டத்தைப்போல அலைந்துகொண்டிருக்கிறது. நூலை கையில் வைத்திருப்பவர் அறுந்துபோன பட்டத்தை தேடிக்கண்டுபிடிப்பதும் உண்டு. அல்லது ஏதாவது ஒரு மரத்தில் அல்லது மின்கம்பத்தில் சிக்கிக்கொண்டு அதுவே சாசுவதம் என்று பட்டம் அந்த இடத்திலேயே படபடப்பதும் உண்டு.
படித்து முடித்துவிட்டு ஏதாவது ஒரு வேலையில், அல்லது வேலை என்று கருதப்படுகிற ஏதாவது ஒன்றில் பொருந்திக்கொள்கிற வரை இளைஞர்கள் படுகிறபாடு சொல்லில் மாளாதது. அந்தக் காலத்தைத்தான் போடி மாலன் அற்புதமான முறையில் நாவலாக்கியுள்ளார். பெற்றோர்களாலும், சம்பந்தமேயில்லாத தெருவாசிகளாலும், இளைஞர்களுக்கு 'தண்டச்சோறு' என்ற கலைமாமணி பட்டம் வழங்கப்படுவது இந்தக்காலத்தில்தான். சோற்றுக் கவலையில்லாத கவிஞர்களால் காவியம் ஓவியம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற காதல் வந்து தொலைவதும் இந்தக்காலத்தில்தான்.
வேலையில்லாத இளைஞர்கள் கூடுவதற்கென்றே எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு இடம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. "அலையும் காலம்" நாவலில் வரும் இளங்கோ, கண்ணன், ஹரிகரன் போன்ற இளைஞர்களுக்கு சங்கீதா இசையகம் எனும் கேசட்கடை தான் அன்றாடம் கூடிக்கலைகிற இடம். அரசாங்க வேலையிலிருந்து, ஜவுளிக்கடை வேலை வரை பெற்றோர்கள் வேலையில்லாத மகன்களை ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பானாற்றுப்படை, சிறுபானாற்றுப்படை போல வேலையாற்றுப்படை என்று இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த நாவலில் வரும் இளைஞர்களின் மன உலகத்தை, நிராசைகளை, ஏமாற்றங்களை, வலிகளை, தோழமையை நூலாசிரியர் மாலன் அவர்களுடன் அலைந்து அல்லது அவர்களில் ஒருவராகவே இருந்து பதிவு செய்திருக்கிறார்.
நாவலின் கரு போலவே மொழி நடையும் அலைந்து கொண்டேயிருக்கிறது. விரக்தியை விதைக்கிறதோ என்றுகூட எண்ணத்தோன்றும். ஆனால் வாழ்க்கையை அச்சு அசலாய் பதிவுசெய்துவிட்டால் விரக்தியை வெடித்துக்கொண்டு விதைகள் முளைக்கக்கூடும்.
போடி மாலனுக்கு ஆழ்ந்த வாழ்க்கை அனுபவம் உண்டு. அலைந்து, திரிந்து, பொதிந்து கிடக்கிறது அவரது உள் மனம். அதிலிருந்து இன்னமும் நிறைய கதைகளை அவர் சொல்ல வேண்டும். சொல்லும் திறம் அவரின் எழுத்துக்கு உண்டு.
"அலையும் காலம்"
போடி மாலன்
வெளியீடு:பாரதி புத்தகாலயம்
421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை
சென்னை-600 018
விலை ரூ.60
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|