உமா மகேஸ்வரி கவிதைகள்
சித்திர அரூபம்
எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?
நுழைதலற்ற கதவுகள்
கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.
அழையாமை
செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.
தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.
உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|