Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Sancharam
Sancharam Logo
மார்ச் - மே 2008
ஸ்நேகிதன் கவிதைகள்

123 விளையாட்டு

நிபந்தனைகளற்ற இவ்வாட்டத்தில்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்
நீங்கள் ஓட வேண்டும்
மரணத்தைத் துரத்த ஓடும் புல்லுண்ணியைப் போல
ஏறக்குறைய
உங்கள் சூழலும் அதுதான்
கொரில்லாவாய்ப் பதுங்கிப் பாய்ந்து
தொண்டைக் குழிகளைக் குதறவோ
சங்கிலிகளால் பிணைத்து
நகரவியலா உங்கள் சுயம் ரசிக்கவோ
உமிழ்ந்தே பழக்கப்பட்ட எங்கள் துப்பாக்கிகள்
உடல்களில் ரவைகளை நுழைக்கவோ
உங்கள் சனங்களின் குறிகளை
உங்களைக் கொண்டே அறுக்கப் பணித்தோ
எதுவும் நடக்கலாம்
நீங்கள் ஓடியாக வேண்டும்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்

விதிமுறைகள் குறித்து
மாற்றுக் கருத்தேதுமிருந்தால்
வெள்ளை யோனிகளிலிருந்து
வழிந்த திரவம் தோய்ந்த
துணிகளைக் தருகிறோம்
வேண்டுமானால்
வாயில் கட்டிக் கொண்டு
போராடுங்கள்...
போராடுங்கள்...

கடல்கள்

மூதாதைகள் பயிற்றுவித்த ரகஸ்யம் சொல்லி
பசியாறிப் போகும் கடற்பறவைகளும்
முதுகில் மேயும் கலங்களின் புள்ளிகளும் நிறைந்த
காட்சிகள் நிறம் மாறும் கடல்கள்
ஆதியில் நிச்சலனத்தில் புதைந்திருந்தது
மௌனத்தின் கொடூர சுயம் சகிக்கவியலாது
வேட்கை கொண்ட தேடலின் உந்துதலில்
துடுப்புகள் வலிக்க வலிக்க
கயிறுகள் அவிழ்ந்து
ஓங்காரத்துடன் துவங்கியது
கரைகள் மீதான தேடல்கள்
சலித்து விடாத மீறல்கள்
பிறகொரு நாளில்
ஆழிருட்டுக்குள் புதைந்து போய் விட்ட
பேரமைதியின் மையம் தொட
ஒன்று கூடி தீர்மானித்த கோப்பைகள்
இன்றிரவுக்குள் கடல் குடிக்க வந்தன

பின் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
கடலுக்குள் கோப்பைககளும்
கோப்பைகளுக்குள் கடலும்

காலத்தின் சிலுவை

காலம் தன் தெருக்களில் என்னை
சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது
கந்தலாடையுடன்
படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி
கடந்த காலங்களின்
சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்
மண்குடுவையிலிருந்த தண்ணீரை
நாவுகளுக்கு வார்க்கிறாய்
காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்
நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்
பெருவிரல் நுனியிலிருந்து
மெள்ளத் தளர்ந்து
கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்

நீ தண்ணீர் வார்க்கிறாய்

விடைபெறுதலுக்கான கையசைப்புகள்
அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்

மெல்லப் புதைகிறது இமைகள்
யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.