Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

பூதேவர்களாகிய எங்கள் நிலை

இலண்டன் மாநகராகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கின்றார். ஸ்ரீஸ்ரீஸ்ரீ கே.நடராஜன், சி.இராஜ கோபாலாச்சாரி, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ். சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கட்டரமண சாஸ்திரி, சி.பி. இராமசாமி அய்யர், டி. ரெங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே.ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அனேக பூ தேவர்கள் போய், கால் மாட்டில் நின்றுகொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு:- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே, பூதேவர்களே! எங்கு வந்தீர்கள்?

பூதேவர்கள்:- ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா தங்களிடம் தான் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பூ.தே:- தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்க, தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பூ.தே:- மகாப் பிரபூ! பழையபடி ராட்சதர்களுடைய ஆதிக்கம் வலுத்துவிட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா, இறப்பதா என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சமயம் தாங்கள் அருள்புரியவில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய்விடும். பூலோகமே இல்லையானால் மகா விஷ்ணுவாகிய தங்கள் பாடுகூட திண்டாட்டமாய் போய்விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்குப் பூஜை ஆராதனைகள் உற்சவம் முதலியவைகள் செய்யவோகூட, யாரும் இருக்கமாட்டார்கள். வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன? ஒழிந்தென்ன? எனவே இந்த சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாட்சித் தருளவேண்டும்.

ம.வி:-என்ன, என்ன? உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.

பூ.தே:- பிரபுவே! முன் யுகங்களில் தேவர் களுக்கு ஏற்பட்ட கொடுமைகள்போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றன.

ம.வி:- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.

பூ.தே:- எப்படியோ வந்துவிட்டது. பெரிய உபத்திர வமாய் இருக்கின்றது. ஒவ்வொரு யுகங்களிலும் தேவர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர்களாக வும், அரக்கர்களாகவும் ராட்சதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும்போது, பகவானாகிய தாங்கள்தான் பல அவதாரங் களாக வெளிக்கிளம்பி ராட்சதர்களை எல்லாம் அழித்து, எங்களையும் எங்கள் உயர்வாகிய வேதங்களையும், உத்தியோகங்களாகிய யாகத் தையும் காத்தருளி வருகிறீர்கள்.

ம.வி:-ஆம். அது உண்மைதான்.

பூ.தே:- பிரபுவே! இந்த யுகத்திலும் அதுபோலவே ஒரு ராட்சதன் தோன்றி விட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோகமாகிய யாகத்திலும், வேதத்திலும் கையை வைத்து, அவை களையெல்லாம் அடியோடு ஒழிக்கப் பார்க்கின்றான்.

ம.வி:- அப்படிப்பட்ட ராட்சதன் யார்?

பூ.தே:- பிரபுவே! அவன்தான் `சுயமரியாதை’ என்று சொல்லப்பட்ட ராட்சதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையீனமாய் இருந்து விடாதீர்கள்! நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்துபோவது நிச்சயம். ஏனென்றால், எங்களை ஒழித்தால் தான் தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவுசெய்து, தங்களை ஒழிப்பதற் காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்.

ம.வி:-அப்படியா! அப்பேர்ப்பட்ட ராட்சதனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பூ.தே:- அவன் மகா தவசிரேஷ்டன்; பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மூலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயு தங்களுக்குப் பயந்துகொண்டு சில்லரைத் தேவதைகளும், தங்கள் பரிவாரங்களுங் கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிகள் இல்லை; ரிஷிகள் இல்லை.

ம.வி:-அப்படியா! அவன் செய்யும் கொடுமை என்ன?

பூ.தே:- மதம் பொய் என்கின்றான்; வேதம் பொய் என்கின்றான்; புராணம் பொய் என்கின்றான்; பராசர °மிருதி பொய்யாம்; மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம்; எல்லாம் பொய் என்கின்றான். இராமாயணம் பொய்யாம்; பாரதம் பொய்யாம்; திருவிளையாடல் புராணம் பொய்யாம்; பெரிய புராணம் கூடப் பொய்யாம். தேவர்களைக் கண்டது யார்? விஷ்ணுவைக் கண்டது யார்? சிவனைக் கண்டது யார்? எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச் சான்று, புறச் சான்று காட்டினாலோ, காட்டுகின்றவர்கள் எல்லோரையும் அயோக்கியர்கள், அன்னக் காவடிகள் என்கின்றான். அவனுடைய உபவத்திரவத்தினால் புராணங்களே விற் பனை ஆவதில்லை; காலட்சேபங்களே நடைபெறுவதில்லை. இவைகள் போனாலும் போகட்டும். எங்கள் யாகங்களே நடைபெறுவதில்லை. அவனால் எங்களுக்கு வெகு சிரமமாக இருக்கின்றது.

ம.வி:- அப்படியா சொல்லுகின்றான்?

பூ.தே:- ஆமாம், பகவானே?

ம.வி:- இன்னும் என்ன செய்கின்றான்?

பூ.தே:- நாள் பொய் என்கின்றான்; திதி பொய் என்கின்றான்; சடங்கு பொய் என்கின்றான்; தேர் பொய், திருவிழா பொய் என்கின்றான்.

ம.வி:- சரி, இவ்வளவையும் பொய் என்கின்றானா?

பூ.தே:- ஆம், பிரபூ! மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே பு°தகக் கடைக்காரன் பட்டினி; புராணக் கடைக்காரன் பட்டினி; புராணப் பிரசங்கப் பண்டிதன் பட்டினி; புரோகிதன் பட்டினி; அர்ச்சகன் பட்டினி; குருமார் பட்டினி; சமயப் பிரச்சாரகன் பட்டினி; நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும்படியாகிவிட்டது. இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி, மண்வெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான். கொடுமை! கொடுமை! சகிக்க முடியவில்லை.

ம.வி:- நமது கடவுள் தன்மையைப்பற்றி என்ன சொல்லுகின்றான்? அதையாவது ஒப்புக்கொள்ளுகிறானா, இல்லையா?

பூ.தே:- கடவுளைப் பற்றிச் சொன்னால், எனக்கு அவ சியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா இல்லையா என்றால், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். `கடவுள் இருந்தாலும் சரி’ இல்லாவிட்டாலும் சரி, அதைப் பற்றி உனக்கென்ன கவலை?’ என்கின்றான்.

ம.வி:-பின்ன, அவன் எதைத்தான் ஒப்புக்கொள்ளுகின்றான்?

பூ.தே:- அவன், `மனிதனுக்கு மனிதன் அன்பு, இரக் கம், உதவி, ஒழுக்கம் இவற்றைத் தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை’ என்கின்றான்.

ம.வி:- அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக்கொள்ளுகிறதா?

பூ.தே:- ஒப்புக்கொள்ளுகிறதே! இதுதானே ஆச்சரியமாய் இருக்கின்றது. ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்தச் சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய்ப் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது.

ம.வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே?

பூ.தே:- நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்தே சில ஆள்களைக் கைப்பற்றி, அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங்களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் கூலிக்குப் பிடித்த ஆயுதங்களும் எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டன.

ம.வி:- அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதந்தான் என்ன?

பூ.தே:- `குடி அரசு’, `திராவிடன்’, `குமரன்’, `நாடார் குல மித்திரன்’, `தமிழன்’, `விஸ்வநேசன்’, `சிங்கப்பூர் முன்னேற்றம்’, `சுயமரியாதைத் தொண்டன்’ முதலிய அனேக ஆயுதங்களின் வலிமை, எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்க வைத்துவிட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும் உறை இல்லாமல் வெளியே தலை நீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல், பொய்வேஷம் போட்டுக்கொண்டு திரிந்து பார்த்தும் வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்துவிட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும். தங்கள் பரிவாரங்களான `சைமன் கமிஷன்’ என்னும் உபதேவர்களை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்துவிட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

ம.வி:- இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்?

பூ.தே:- தங்களிடமுள்ள சில பாணங் களைக் கேட்க வந்திருக்கின்றோம்.

ம.வி:- என்ன பாணம்?

பூ.தே:- 124 ஏ; 153 ஏ ஆகிய பாணங்கள் வேண்டும்.

ம.வி:- ஏன், 144 பாணம் வேண்டாமா?

பூ.தே:- 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும், அது அவனிடம்போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு வந்துவிட்டதோடு மாத்திரமல் லாமல், திரும்பிவந்து எய்தவர்கள் மீதுங்கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

ம.வி:- சரி; நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம்; அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியதுபோல் செய்வோம்.

பூ.தே:- பிரபுவே! தங்கள் தூதர்கள் யார்? தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்துவிட் டால் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்க அனுகூலமாயிருக்கும்.

ம.வி:- நமது தூதர்கள் ‘சைமன் கமிஷனர்கள்’; அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.

பூ.தே:- நாங்கள் அறியாத புத்தியினால் தங்கள் தூதர்களை ஆதியில் அலட்சியமாய்க் கருதி விட்டோம்; அதனால் வந்த வினைப்பகுதி என்றுகூடச் சொல்லலாம். ஆனாலும், இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங்களுக்குக் கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே!

ம.வி:- நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை; மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்துவிடுங்கள்.

பூ.தே:- அப்படியே ஆகட்டும், பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டுபேருக்குமே ஆபத்துவந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங்கள்.

ம.வி:- நம்மைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் காரியத்தை நீங்கள் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி, போய்வாருங்கள்!


(சித்திரபுத்திரன் கட்டுரை- `குடிஅரசு’, 10.3.1929)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com