Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              சைவப்பற்று

இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்பது லக்ஷத்தையும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினையும்,
அருந்துணையாக - இருக்கும்
ஆயிரம் வேலியையும்
பெருகும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத்துக்களையும்,

ஆடை வகைகளையும் - பசும்பொன்
ஆபரணங்களையும்
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந்து நிறைவதையும்,
நீடு களஞ்சியம்கள் - விளைந்த
நெல்லில் நிறைவதையும்,
வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகையினையும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்து
கட்டில் அறைநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத்தைதனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சைவத்தை ஆரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்;
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்தது கேளீர்.

நித்திரைப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ஆரம்பித்தார்.
'இத்தனை நாளாகப் - புவியில்
எனது சைவமதை
நித்த நித்த முயன்றே - புவியில்
நீளப்பரப்பி விட்டாய்.

மடத்தின் ஆஸ்தியெல்லாம் - பொதுவில்
மக்களுக்கு ஆக்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்கை
நடத்துக!' என்றே -சிவனார்
நவின்றுபின் மறைந்தார்.
இடிமுழக்க மென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டதுபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்
'கூப்பிடு காவலரை' - எனவே
கூச்சல் கிளப்பிவிட்டார்;
'காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
களவுபோகு' மென்றார்
'மாப்பிளை என்றனுக்கே - இத்ததி
மரணம் ஏதுக்' கென்றார்.

சொப்பனத்தை நினைத்தார் - தம்பிரான்
துள்ளிவிழுந்து அழுதார்!
ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும்
உடல் அசைந்ததில்லை!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
இன்பப் பொருளையெல்லாம்;
தப்பிப் பிழைப்பதுண்டோ - எனது
சைவம் எனத்துடித்தார்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.