Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             காதலி:

உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி
மண்டிடும் காதற் கண்ணன்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன். என்மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்

அறைவாயில் உட்பு குந்தேன்
அத்தான், தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனி இதழ் நெடிதுறிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக்கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்சணைமேல்
நலியாதுட்கார வைத்தான்.

கமழ்தேய்வு பூசி வேண்டிக்
கனிவோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடையால் துடைத்தே
தமிழ், அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,

தென்றலும் போதா தென்று
சிவிறி கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப்பொழு தாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி;

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்.
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால்து டைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி.

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றாற்கு
மறம்குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மறைகுன்ற நேரும் அன்றோ?

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்! பின்
இரவுபோ யிற்றே கோழி,
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ணரும்பு

உயிர்போன்றான் துயில்க ளைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.
அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
'அழித்தது வறுமை அன்னாய்
உதவுக' என்று நைந்தார்.
'பிழைத்தது மழைஎன் அத்தான்
பெய்'என்றேன் குடிகட் கெல்லாம்
மழைத்தது மழைக்கை செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com