Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             கைம்மைக் கொடுமை

கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக்
     கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
     வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
     எதிரிற் காணுகின்றோம்
கண்ணிருந் தென்ன பயன்? நமக்குக்
     காதிருந் தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் - கடலை
     வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
     இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
     வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற
     உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை, உமி - இவற்றின்
     புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே - அவற்றைப்
     பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம - நம்நிலை
     இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
     அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி - அப்பெரும்
     கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
     நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் - பெண்களின்
     சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் - உயிரின்
     இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் - இல்லத்தில்
     குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; - அவற்றின்
     விருப்பத்தை யறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் - அவனின்
     மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ,
     அடிமைப் பெண்கதியே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.