 |
பாரதியார் பாடல்கள்
குயிலின் பாட்டு
ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஏகதாளம்
ஸ்வரம்- "ஸகா-ரிமா-காரீ
பாபாபாபா-மாமாமாமா
ரீகா-ரிகமா-மாமா"
சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். (காதல்)
1. அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே. (காதல்)
2. இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். (காதல்)
3. நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம். (காதல்)
4. தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம். (காதல்)
5. பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)
6. புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே. (காதல்)
7. உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி. (காதல்)
8. கூடல், கூடல், கூடல்;
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். (காதல்)
9. குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. (காதல்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|