 |
பாரதியார் பாடல்கள்
கண்ணம்மா என் காதலி - 5
(குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி - ஆதிதாளம் ;
சிருங்கார ரஸம்
தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ! 1
மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ? 2
கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற் காகவோ
நாணிக் குலைந்திடுவாள். 3
கூடிப் பிரியாமலே - ஓரி ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! 4
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|