 |
பாரதியார் பாடல்கள்
கண்ணம்மா என் காதலி - 2
(பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ;
சிருங்கார ரஸம்
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலினையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுத் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
"வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?" என்று மொழிந்தேன். 2
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி "என்ன செய்தி சொல்" என்றேன்;
"நெரித்த திரைகடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி" என்றாள். 3
"நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்". 4
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|