 |
பாரதியார் பாடல்கள்
கண்ணம்மா என் காதலி - 1
(காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரஸங்கள் : சிருங்காரம், அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ! 1
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன். 2
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று! 3
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|