 |
பாரதியார் பாடல்கள்
கண்ணன் என் காதலன் - 5 (பிரிவாற்றாமை - பாங்கியைத் தூது விடுத்தல்-2)
ராகம்- பிலஹரி
ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல் வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ? 1
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு கானில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். 2
ஓய்வு மொழிதலு மில்லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும். 3
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ ? 4
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி! 5
கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்து பயனுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி? 6
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|