|
பாரதியார் பாடல்கள்
பகைவனுக் கருள்வாய்
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்.
புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான். (பகைவனுக்) 1
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே (பகைவனுக்) 2
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே (பகைவனுக்) 3
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே (பகைவனுக்) 4
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தோிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே (பகைவனுக்) 5
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே (பகைவனுக்) 6
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|