|
பாரதியார் பாடல்கள்
சொல்
[சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.]
தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்
ஆவ லறிந்துவரு வீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1
‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ? - அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந் தேகுமோ? - என்றன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ? 2
‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ? - அதில்
உங்கள் அருள் பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” - என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீ£ர் 4
வான மழைபொழிதல் போலவே - நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்
கானை அழித்துமனை கட்டுவீர் - துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர் 5
விரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். 6
மின்ன லனையதிறல் ஓங்குமே - உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே
தின்னும் பொருளமுதம் ஆகுமே - இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே - நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே.
கைவைத்து ததுபசும்பொன் ஆகுமே - பின்பு
காலன் பயமொழிந்து போகுமே. 8
‘வலிமை, வலிமை’ என்று பாடுவோம் - என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் - நெஞ்சில்
கவலை இருளனைத்தும் நீங்கினோம். 9
‘அமிழ்தம், அமிழ்தம்’ என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|