|
பாரதியார் பாடல்கள்
கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவருக்கும் பேருவகை. 1
திருமணை யிது கொள்ளைப் போர்க்கப்பல் - இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்.
வெருவுற மாய்வார் பலர் கடலில் - நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே. 2
அந்நகர் தனிலோர் இளவரசன் - நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை;
பக்குவத் தேயிலை நீர்குடிப்போம் - அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம் - நம்மை
நலிந்திடும் பேயங்கு வாராதே. 5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம், 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே - அங்குச்
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் - அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே - வழி
காண்ப திலாவகை செய்திடுவோம் - ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே! - நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம் - அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் - நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே. 9
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|