|
பாரதியார் பாடல்கள்
வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று
[ ராகம் - தண்டகம்] [தாளம் - ஆதி]
நாட்டி லெங்கும் ஸ்வதந்திர வாஞ்சையை
நாட்டி னாய் - கனல் - மூட்டினாய்;
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி - காட்டுவேன் (நாட்டி) 1
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித் தாய் - எமை - தூஷித்தாய்
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய் - பொருள் - ஈட்டினாய். (நாட்டி) 2
கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினாய் - சட்டம் - மீறினாய்
ஏழைப்பட் டிங்கு இரத்தல் இழிவென்றே
ஏசினாய் - வீரம் - பேசினாய். (நாட்டி) 3
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் - புன்மை - போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டி னாய் - ஆசை ஊட்டினாய். (நாட்டி) 4
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
தூண்டி னாய் - புகழ் - வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள
காட்டினாய் - சோர்வை - ஓட்டினாய். (நாட்டி) 5
எங்கும் இந்தசுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் - விதை - தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்ய வோ - நீங்கள் உய்யவோ? (நாட்டி) 6
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லு வேன் - குத்திக் கொல்லுவேன்
தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளு வேன் - பழி - கொள்ளுவேன். (நாட்டி) 7
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|