|
பாரதியார் பாடல்கள்
தொண்டு செய்யும் அடிமை
(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது)
[நந்தனார் சரித்திரத்திலுள்ள ‘மாடு தின்னும் புலையா - உனக்கு மார்கழித் திருநாளா’ என்ற பாட்டின் வர்ணமெட்டு]
தொண்டு செய்யும் அடிமை! - உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டுகண்ட துண்டோ - அதற்குப்
பாத்திர மாவாயோ? (தொண்டு)
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் - கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை!
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சைவாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணுத லொழித்தாயோ? (தொண்டு)
கப்ப லேறுவாயோ? - அடிமை!
கடலைத்தாண்டு வாயோ?
குப்பை விரும்பும்நாய்க்கே - அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ? (தொண்டு)
ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே – அடிமை!
வீரியம் அறிவாயோ? (தொண்டு)
சேர்ந்து வாழுவீரோ? உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ? (தொண்டு)
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன்கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா. (தொண்டு)
நாடு காப்பதற்கே - உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா – அடிமை!
வேலைசெய்யப் போடா! (தொண்டு)
சேனை நடத்துவாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈனமான தொழிலே - உங்களுக்கு
இசைவதாகும் போடா! (தொண்டு)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|