|
பாரதியார் பாடல்கள்
தமிழ் நாடு
தமிழ்த் தாய்
தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல்
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்)
ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். 2
கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். 3
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்;
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். 4
நன்றென்றுந் தீ தென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் -வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். 5
கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர் 6
தந்தை அருள் வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்.
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். 7
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! 8
“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள்கூறும்:
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 9.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.” 10
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடு வீர்எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். 12
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|