|
பாரதியார் பாடல்கள்
பாரத சமுதாயம்
[ராகம் -- பியாக்] [தாளம் -- திஸ்ர ஏகதாளம்]
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க! வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! -- ஜய ஜய ஜய! (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்க இனியுண்டோ? -- புலனில்
வாழ்க்கை இனியுண்டோ? -- நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு -- இது
கணக்கின்றித் தரு நாடு -- நித்தநித்தம்
கணக்கின்றித் தரு நாடு -- வாழ்க (பாரத) 1
இனியொரு விதிசெய் வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க (பாரத) 2
“எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் -- வாழ்க (பாரத) 3
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத) 4
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|