|
பாரதியார் பாடல்கள்
பாரத தேவியின் திருத்தசாங்கம் [ராகம் -- ஹிந்துஸ்தானி தோடி]
நாமம்
(காம்போதி)
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய் -- இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு 1
நாடு
(வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய் -- வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி. 2
நகர்
(மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? -- சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம். 3
ஆறு
(சுருட்டி)
வன்னக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய் -- நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து. 4
மலை
(கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய் -- ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. 5
ஊர்தி
(தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரத்தாய்! -- தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள். 6
படை
(முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய் -- பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகப்பரிதாந்
திண்ணமுறு வான்குலிசம் தேறு. 7
முரசு
(செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே அன்னைதிரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய் -- பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு. 8
தார்
(பிலகரி)
வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார் கூறாய் -- சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனந்து. 9
கொடி
(கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென் -- அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி. 10
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|