Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
சுகிர்தராணி கவிதைகள்

கரித்துண்டுகள்

வழக்கொழிந்த காட்சியகத்தில்
புழுத்தநெடி வீசும் தாழிஒன்று
அகழ்ந்தெடுக்கப் படுகிறது
கனவுகளைச் சேமித்து வைக்கும்
மனதின் கலயத்தைப் போலிருக்கும்
அதன் உட்சுவரில் கரிய
சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன
மாறிய பருவத்தின் போதெல்லாம்
பூக்களைச் சிருஷ்டித்துத் தந்த
விருட்சங்களும்
கள்ளிப் பாலாய் திரண்டிருக்கும்
காட்டுப் பழங்களும்
சர்ப்பத்தின் நீண்டிருக்கும் நாவெனச்
சாட்டையைச் சொடுக்கும் ஆண்களுமாய்
வரையப்பட்டவை பிரமிப்பூட்டும் வேளையில்
உள்ளிருக்கும் உதிர்ந்த எலும்புகளுக்குள்
மின்னுகின்றன சில கரித்துண்டுகள்

பட்டையுரிந்த காதல்

பருவம் கழிந்தொரு விருட்சமாய்
பூத்துக் கொண்டிருக்கிறேன்
அருகம்புற்கள் கிளைத்திருக்கும்
வரப்பின் விளிம்புகளில் நின்று
இருகை நீட்டி அழைக்கிறாய்
மரமாகவே நிற்கிறேன்
காதலின் இனிப்பு திரவம்
உன்னிலிருந்து உருகி வழிந்து
என்னை நனைக்கிறது
அள்ளிப் பருக முடியாமல்
கைகள் புதைந்திருக்கின்றன
சிறு தலையசைப்பின் மூலம்
சில பூக்களை உதிர்த்து
உன் நாட்பட்ட காதலை
ஏற்கலா மெனினும்
காற்றும் பித்துப் பிடித்தாற்போல்
இடம் பெயர்ந்து விட்டிருக்கிறது
யாது செய்வேன்
என் அன்பை யாசித்து யாசித்துக்
கடும்பாலையைக் கடந்து போகிறாய்
திரும்பி வரும்போது புரிந்து கொள்
உன் பெரும்அன்பால் தீய்ந்துபோய்
பட்டையுரிந்து மொட்டைமரமாய் நிற்கும்
என் காதலையும்

கரை ஒதுங்கும் சிறுதாவரம்

நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்
ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்
குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்
உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது
உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com