Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
குலசேகரன் கவிதைகள்

கல் யாளி

என் மேல் பாய
கல்லாகிக் காத்திருக்கிறது யாளி
எப்போதும் தூணருகில்
பின்னங்கால்களால் எழுந்து நின்றிருப்பது
நான் நுழையும் கணத்துக்கு
கண்களில் பார்வை திறக்க
பிடரி காற்றில் சிலிர்க்க
உடலில் குருதி ஓடுகிறது
நீண்ட காலத்தால் உருமாறாது
கானகத்தின் ஆழத்தில் வாழ்ந்து
கற்பனையில் வெளியாகும் விலங்கு
இவ்வேளைக்கே காட்சியாகிறது
விரியும் மண்டபம் தாங்கி
ஆயிரம் கால்களில் ஒளிந்து
சொல்லும் பாவனையில் பாவைகள்
வெறும் சாட்சியாகக் சமைந்திருக்கிறார்கள்
எதிரில் கண்டிருக்கும் என்னிடம்
உறுமிப் பிளிறும் ஒலியாக
பெரும் சீற்றத்தால் பாய்கிறது
அதன் திறந்த கோரைப் பற்கள்
என்னைக் கொன்று தின்கிறது
உள்ளிருந்து நீளும் துதிக்கை
எனக்குப் புத்துயிர் ஊட்டி
மறுபுறம் தாவி மறைந்ததும்
மிகுதி யாளி கல்லாயிருக்கிறது

வாயிற் புறம்

நீங்கள் தொலைவில் சிறிய
எல்லா வழிகளும் முடியும்
கோபுரத்தை நோக்கி செல்கிறீர்கள்
நெருங்கும் கணங்களில் வளர்ந்து
வானுக்கும் பூமிக்குமாக தோன்றி
நிழல் கீழே விழாதிருக்கிறது
உங்களோடு ஒட்டிய காலணிகளை
வெளியில் கழற்றி நுழைந்தால்
உள்ளே மதில்கள் சூழ்ந்து
திசைகளில் தெரியும் கோபுரங்கள்
மண்டபத் தூண்களினூடே தேடி
கருவறையடைந்த தரிசனத்தில்
உங்களின் ஓட்டம் நிற்கிறது
மீண்டும் வலம் வருகையில்
கோயில் வழியில்லாமல் சுற்றுகிறது
ஒவ்வொன்றிலும் யானைகள் அசைய
நான்குபுறங்களும் ஒன்றாகின்றன
எங்கும் மனித கூட்டத்தில்
நீங்கள் புகுந்ததை மறந்து
நீண்ட ஆயுட்காலங்களாய்
ஆலயத்தில் சுழன்று கொண்டிருக்கிறீர்கள்
ஏதோவொரு கோபுரத்தில் வெளிப்பட்டு
தொலைவிற்கு விலகிச் சென்று
அப்போது காலணிகளைக் காண்கிறீர்கள்

பேய் ஆட்டம்

தினம் நள்ளிரவின் அமைதியில்
தலைமயிர் வீதிகளில் விரிய
அவள் கால்பாவாது ஓடுகிறாள்
யோனியில் எழும்பும் கூக்குரல்
வானில் கருத்து எதிரொலித்து
உறங்கும் வீடுகளை எழுப்புகிறது
குழந்தைகளின் காதுகளைப் பொத்தி
கனவில் ஒலிக்கும் கூவலை
விழித்து வெளியே காண்கின்றனர்
அகாலத்தில் இறந்த உரையாடலையும்
மயக்கும் புதிய சொற்களையும்
அவர்கள் புரியாமல் கேட்கிறார்கள்
பெண்கள் உள்ளுணர்வின் பயத்தில்
அவள் வார்த்தைகளை வழிபடுகிறார்க்ள
அவள் தற்கொலையுண்ட நாவால்
ஆண்குறிகள் அழிய சாபமிடுகிறாள்
அவற்றை நீட்டிப் புகைத்து
ஒழுகும் மதுவைக் குடிக்கிறாள்
அவளின் பற்பல குரல்களை
வேப்பிலைகளை வீசி நெரித்து
மந்திர சாட்டையால் சுருட்டி
ஊர் எல்லைக்கு விரட்டுகிறார்கள்
மீண்டும் இருட்டில் மோகித்து
நெருங்கும் செவிகளில் அறைந்து
அவள் இரத்தம் கக்கவைக்கிறாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.