சட்டத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் - தனியார் வழக்கு
வழக்கறிஞர் பி. விஜயகுமார்
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 200 தனியார் வழக்குகளைப்பற்றி விவரிக்கிறது.
பொதுவாக பொதுமக்கள் அனைவரும் தவறுதலாக ஒன்று நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் காவல்துறையினர் மட்டும்தான் ஒரு புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று. ஒருபோதும் அவ்வாறு கிடையாது.
அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாக கல்வி கற்றுத்தருகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் பணம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுத் தருகிறார்கள். அதேபோல் தான் காவல்துறை இலவசமாக வழக்குப்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்ய முன்வந்தால் வழக்கறிஞர்கள் வைப்பதற்கும் மற்றும் சில விஷயங்களுக்கும் பணம் செலவாகிறது.
ஆதலால் இதற்குள்ள வித்தியாசம் அரசுபள்ளிகளில் படிப்பதற்கும் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கும் உள்ள வித்தியாசம் போன்றதாகும்.
போலீசார் பதிவு செய்யும் எந்த ஒரு வழக்கையும் நாம் நேரடியாக நீதிமன்றம் ஆஜராகி அந்த வழக்கை நீதிமன்றம் மூலமும் பதிவு செய்யலாம்.
பெரும்பாலும் நீதிமன்றங்களில் காவல்துறையினருக்கு எதிராகத்தான் தனியார் வழக்கு தொடரப்படுகிறது. இருப்பினும் தற்போது காவல்துறை பதிவு செய்யாத வழக்குகளை தனியார் பலர் நீதிமன்றம் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
காவல்துறையினருக்கு எதிரான வழக்குகளை சம்பவம் நடந்த மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். இந்த வரைமுறை மற்றவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் ஒவ்வொரு இந்திய தண்டனைச் சட்ட பிரிவை அனுசரித்து அவைகளுக்குண்டான காலகெடுவுக்குள் வழக்கை பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பெல்லாம் துணை கண்காணிப்பாளர் (D.S.P.) மற்றும் அதிலிருந்து உயர்ந்த பதவிகள் கொண்டவர்கள் மீது தனியார் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமானால் அரசாங்கத்தின் அனுமதி வாங்கவேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை சென்னை உயர்நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளது.
ஆதலால் தற்போது காவல்துறையினர் எந்த ஒரு பதவியில் இருந்தாலும் தனியார் வழக்கு அவர்கள் மீது தொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்த வேண்டுமென்றால் பொதுமக்கள் அனைவரும் தனியார் வழக்குப்பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுவது மிக அவசியம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|