கொல்லப்படும் கடவுள்கள்
மயூரா ரத்தினசாமி
அப்பொழுது கடவுள் என்னருகில் இருந்தார்
சதா அவரை உதைத்துக் கொண்டேயிருந்தேன்
அழுவதற்கும் சிரிப்பதற்கும் மட்டுமே
சொல்லிக்கொடுத்திருந்தார்
நான் சிரித்தபோது சிரித்தும்
அழுதபோது அழுதபடியுமிருந்தது இவ் உலகம்
கடவுளிடம் எதையும் வேண்டவுமில்லை
கைகூப்பி வணங்கியவனுமில்லை
வணங்கவும் தெரியாது
ஒலிக்குறிப்புகளை கூர்ந்து
கவனிக்கத் தொடங்கியிருந்தேன்
ஒலிக்குறிப்புகளை மொழியென உணர்ந்தேன்
கோடி கோடி ஒலிகள்
கோடி கோடி குறிப்புகள்
கோடி கோடி கோடி கோடி மொழிகள்
எனது மொழியால்
கடவுளை அழைக்கத் துவங்கினேன்
எனது உனது என்று கடவுளை சற்றே
தள்ளி வைத்தது அப்பொழுதுதான்
விலகிப் போய்க்கொண்டிருப்பதைக்
கூப்பிடுகிறேன்
நான் கூப்பிடுகிறேன்
கடவுள் போய்க்கொண்டிருக்கிறார்
பூக்களை தூவி அழைக்கிறேன்
கடவுள் போய்க்கொண்டிருக்கிறார்
கனிகளை காட்டி அழைக்கிறேன்
கடவுள் போய்க்கொண்டிருக்கிறார்
தொண்டை வறட்சிக்கு கனிகளை புசித்தபடி
கடவுளை நோக்கிப் பாடத்துவங்கினேன்
இசையில் நான் லயித்திருக்கையில்
கடவுள் என்னைவிட்டு
வெகுதூரம் போய்விட்டிருந்தார்
தெய்வீக இசையென்று
என் பாடல்கள் பிரபலம் பெற்றன
இசை ஒரு காலயந்திரம்
அது என் விரல் பிடித்து முந்தைய
பருவங்களுக்குள் அழைத்துச் சென்றது
ஒவ்வொன்றாய் தொலைத்தபடி
அதன்பின் சென்றுகொண்டிருந்தேன்
சொற்கள் மறந்தன
மொழி மறந்தது
ஒலி மறைந்தது
ஒரு புள்ளியில் அதுவும் காணாமல் போக
நான் கடவுளாகியிருந்தேன்
தேவகானமய்யா இது என ஒருவர்
என் காலைத்தொட்டுக் கும்பிட்டபோது
நான் கடவுளாகியிருந்தேன்
நான் என்னைப் பற்றிப் பாடத்
துவங்கியிருந்தேன்
கூட்டத்தின் சலசலப்பில்
நான் மூழ்கிக்கொண்டிருந்தேன்
கடவுளைப் பாடு
உன்னைப் பாடாதே
கடவுளைப் பாடு
உன்னைப் பாடாதே
குரல்கள் நெருங்கி என்னை
நெரிக்கத் துவங்கின
இறுதியில் அவர்கள் என்னை
அடித்துக்கொன்றனர்
இப்படித்தான் உலகெங்கும்
கடவுள்கள் கொல்லப்படுவது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|