அசுரனிடம் கேளுங்கள்
நடிகர் சரத்குமாரும் அரசியல் கட்சி தொடங்கிவிட்டாரே!
- சரவணன், மதுரை
அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுக்கு உழைப்பது போல கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கும்போது நடிப்பையே தொழிலாகக் கொண்ட ஒருவர் அந்த மேடைக்கு வருவதை சகித்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?
டைட்டானியம் தொழிற்சாலையை தொடங்கிவிடுவோம் என்று டாடா அதிகாரி உறுதிபட கூறியிருக்கிறாரே!
- ஆல்பர்ட், கோவை
'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டவர்களே துணையாக இருக்கையில் வடக்கத்திய நிறுவனமான டாடாவுக்கு என்ன கவலை?
இராமநாதபுரம் மாவட்டத்தையே இப்போது வடக்கத்தியர் வாங்கிக் குவிப்பதாகவும், அதற்கு அங்கு பூமிக்கு கீழே உள்ள நிலக்கரி படிவுகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் சிறிது காலத்தில் தமிழகம் இருக்கும் தமிழகத்திற்கு முதல்வரும் இருப்பார். ஆனால், தமிழ்நாடுதான் ஒட்டுமொத்தமாக வடக்கத்தியர்களுக்குச் சொந்தமாக ஆகியிருக்கும்.
கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம் என்று மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்களே?
- நந்தன், சென்னை
இந்திய மக்களின் இரத்தத்தையும் வியர்வையையும் வரிப்பணமாக சுரண்டி, அதன் மூலம் சலுகைக் கட்டணத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் இறுதியாண்டு முடித்ததும் சட்டை கசங்கும் முன்பே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மேலை நாடுகளுக்கு பறந்து சென்றுவிட்டு, 'ப்ளடி இன்டியன்ஸ்' என்றோ, அல்லது 'இந்தியா சரியில்ல' என்று புலம்பல் விமர்சித்தவாறு வாழ்வது என்ன நியாயம். அரசின் கட்டணச் சலுகை தேவை என்றால் அவர்கள் ஓராண்டாவது கிராமத்தில் பணியாற்றியாக வேண்டும் என்பதே நியாயம். அவர்கள் ஒரு ரூபாய் கூட சலுகை பெறாமல் சொந்தச் செலவில் படித்தால் சரி.
விஜயகாந்த் டாடாவை ஆதரிக்கிறாரே!
- இரமேஷ், தூத்துக்குடி.
ஆம், தே.மு.தி.க. என்று புதிதாக ஒரு அணியை மேடையில் இறக்கியுள்ள நடிகர் விஜய்காந்த் டாடாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வேடிக்கையானது.
"நமக்கு எல்லாமே அரசே செய்யவேண்டும் என்று நினைப்பது சரியாக இருக்காது. தனியார் என்றால் ஒழுக்கம் இருக்கும். தவிர சிலவற்றை தனியார்தான் செய்யவேண்டும்' என்று சொல்கிறார் அவர்.
ஆக, விஜய்காந்த் கட்சிக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் அவர் முதல்வர் பதவியை ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிடுவார் என்று நம்பலாம்.
பின்னே.... சும்மாவா. தனியாரே 'குவாலிட்டின்னா' பன்னாட்டு நிறுவனங்கள்னா 'இன்டர்நேசனல் குவாலிட்டி' ஆச்சே.
அப்புறம், அமைச்சர் பதவிகூட அமெரிக்காவுல எம்.பி.ஏ படிச்சவுக்களுக்குத்தான். பாவம் தே.மு.தி.க குட்டித் தலைகள்.
கேரள அமைச்சர் சுதாகரன் குருவாயூர் கோயிலில் சாமி கும்பிடாமல் திரும்பியதை கண்டிப்பது சரியா?
- சதீஷ்குமார், நாகர்கோவில்
அவர் அமைச்சர்தான். பூசாரி அல்ல. அவரது பணி கோயில் நிர்வாகத்தை கண்காணிப்பதுதான். சாமி கும்பிடுவது அல்ல. இப்படியே போனால் அமைச்சர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு கோயிலாக சென்று வழிபடத்தான் நேரம் இருக்குமே தவிர நிர்வகிக்க நேரம் இருக்காது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|