Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

தமிழர்களை பிடித்த பேய்

தமிழகம் முழுவதும் கடந்த ஆடி மாதம் ஏற்பட்ட பேய் பீதிக்கு காரணம் கேரள மந்திரவாதிகள். மர்ம ஆசாமி யை வைத்து நடத்திய பட்டப் பகல் நாடகம்தான் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆடி மாதம் பேய்களுக்கு பிடித்த மாதம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு போனாலும் போனார்கள். நவீன விஞ்ஞான யுகத்திலும் பேய் பீதி அனைவரையும் உறைய வைத்தபடிதான் இருக்கிறது.

கடந்த மாதம் முதன் முதலாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து பேய்பூதம் கிளம்பியது. சிகப்பு நிற சேலை கட்டிய பேய் ஒன்று வீட்டுக் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டதாகவும், அதைக் குடித்துவிட்டு, ரத்த வாந்தி எடுத்து, மறைந்து விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.
இதையடுத்து நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்கள் முழுவதும் பொதுமக்கள் பேய் பீதியால் அலற ஆரம்பித்தனர். மதுரை, திருச்சி, சேலத்திலும் இந்த பேய் பீதி உலவியது. எல்லோரும் வீட்டுக்கு வீடு வேப்பங் கொத்துகளை கட்டி பேய் வராமல் பார்த்துக் கொண்டார்கள். பல இடங்களில் சிறப்பு பூஜைகள் அரங்கேறின.

இது குறித்து மாலைமலர் தரும் சிறப்பு செய்திகள் :

இந்த நிலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமரி மாவட்டம், நெய்யாற்றின் கரையை அடுத்த ஒலத்தானி கிராமத்தில் உள்ள கவிதா ஜங்ஷன் என்ற இடத்தில் சிறு குழந்தையை வைத்து ஒரு ஆசாமி கடந்த வாரம் நடன வித்தை காட்டிக் கொண்டிருந்தான். அரவாணி போலிருந்த அந்த ஆசாமியை அங்குள்ள இளைஞர்கள் கேலியும், கிண்டலும் செய்தபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மர்ம ஆசாமியை அவர்கள் நையப்புடைத்து நீ யார்? என்று கேள்விகள் கேட்டபோது அவன் திடுக்கிடும் தகவல்களை கூறினான்.
தமிழகத்தின் ஏராளமான கிராமங்களில் இவன்தான் பேய் வேஷம் போட்டு, அச்சுறுத்தி வந்துள்ளான். இவன் கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த பையாம் பலம் என்ற இடத்தைச் சேர்ந்தவன். பெயர்:சசிகுமார் (வயது32).

சுமார் 50 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று இவன் “தாகமாக இருக்கிறது தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டு வாங்கி குடித்துள்ளான்.
முன்னதாக வாயினுள் சிவப்பு நிறப்பவுடரை ஒதுக்கி வைத்துக்கொண்டு, இந்தத் தண் ணீரைக் குடித்ததும் அப்படியே துப்பும்போது, அது ரத்தவாந்தி போல் பொதுமக்களை அச்சுறுத்தி உள்ளது.

பெரும்பாலும் இவன் பெண்கள், குழந்தைகள் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று இத்தகைய நாடகத்தை அரங்கேற்றி உள்ளான்.
இதற்காக சிகப்பு நிற சேலை கட்டி, சில சமயங்களில் சிறு குழந்தையுடனும் சென்றுள்ளான். சசிகுமார் எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றினான் என்பது பற்றிய தகவலும் தெரிய வந்துள்ளது.

பொதுவாக பேய், பில்லி சூன்யம் போன்ற பீதிகளுக்கு பரிகார பூஜை நடத்த கேரள மந்திரவாதிகளைத்தான் நாடுவார்கள். இதற்காக அவர்கள் ஆடி மாதத்தை பயன்படுத்திக் கொண்டு பேய் பீதியை கிளப்பிவிட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த மாதம் கடந்த மாதம் ஏராளமான பேர் தமிழக எல்லையில் உள்ள கேரள மந்திரவாதிகளை நாடியுள்ளனர்.

இந்த பேய் பீதி நாடகம் நடத்துவதற்கு முதலில் தான் பயந்ததாகவும், தினசரி ரூ. 200 சம்பளம் தந்ததால் சம்மதம் தெரிவித்ததாகவும் சசிகுமார் கூறியுள்ளான். ஒலத்தானி கிராமத்து இளைஞர்களிடம் அவன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் நையப்புடைத்து எடுத்ததோடு அவனை விட்டு விட்டார்கள்.

“இனிமேல் தமிழக கிராமங்களில் எங்காவது பேய் தென்பட்டால் “நீ சசிகுமார் தானேடா” என்று கேட்டு, நையப்புடைத்து விரட்டியடியுங்கள்”.

நாடி சோதிட மோசடி

நாகை மாவட்டம் வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரில் நாடி சோதிடம் என்ற மோசடி கொடி கட்டிப் பறக்கிறது. தஞ்சையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சரசுவதி மகால் நூல் நிலையத்தில் இந்த நாடி சோதிடம் கூறும் ஓலைச் சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு, அங்கிருந்து இதைப் பெற்றதாக, நாடி சோதிடர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த மோசடிக்கு எதிராக சீர்காழி பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. நாடி சோதிடம் கூறும் ஒரு பிரபல சோதிடருக்கு எதிராக சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. பழம்பெரும் சுயமரியாதை வீரர் வழக்கறிஞர் சு. சோமசுந்தரம் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரும் சரசுவதி மகால் நூலக இயக்குனருமான கா. விஜயகுமாருக்கு, வழக்கறிஞர் சோமசுந்தரம் கடிதம் எழுதினார். அதற்கு நாடி சோதிடர்கள் எவரும் இந்நூலகத்திலிருந்து எந்த ஓலைச் சுவடியையும் பெறவில்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பதிலளித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரின் இந்த பதிலை பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கைகளாக அச்சிட்டு சீர்காழி பெரியார் திராவிடர் கழகம் பரப்பி வருகிறது.

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய பதில்:

பார்வையில் கண்ட தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2006-ன் படியான மனுவில் கோரப்பட்டுள்ள தகவல்கள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகின்றது.

1. இந்நூலகச் சுவடிகளுக்கு இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்திலிருந்து அட்டவணை உள்ளது. அதன்படியும் வேறு ஆவணங்களின்படியும் இந்நூலகத்திலிருந்து எந்த தனி நபர்களுக்கும் இதுவரை சுவடிகள் ஏதும் கொடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2. வைத்தீசுவரன் கோவில் நாடி சோதிடர்கள் இந்நூலகத்திலிருந்து பெறப்பட்ட சுவடிகளுக்கு பணம் செலுத்துவதாக கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

3. 20 ஆண்டுகளுக்கு முன்அப்போதைய மாவட்ட ஆட்சியர் வைத்தீசுவரன் கோவில் நாடி சோதிடர்களிடமிருந்து ஓலைச் சுவடிகளைப் பறிமுதல் செய்து வழக்கு நடந்து திரும்பப் பெற்றதாக கூறப்படுவதும் உண்மையல்ல. அவ்வாறு நடந்ததற்கான எந்தக் குறிப்புகளும் நூலகத்தில் இல்லை.

4. இந்நூலகத்தில் சுமார் 49,000 தலைப்புகளில் வடமொழி, தமிழ், மராத்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ளன. தமிழ் மொழிகள் மருத்துவப் பிரிவில் நோய் கண்டறியும் நாடி பற்றிய சுவடிகள் உள்ளன. நாடி சோதிடம் பற்றிய சுவடிகள் இல்லை.

5. மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் பெயரைப் பயன்படுத்தி நாடி சோதிடத் தொழில் செய்கிறார்கள் என ஆதாரப் பூர்வமான தகவலோ புகாரோ இதுவரை பெறவில்லை.

- இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, பொதுமக்களே நாடி சோதிட மோசடியில் ஏமாந்து பணத்தை வீணாக்காதீர்கள்.





நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.