Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puthiya ThendralArticle
Puthiya Thendral Logo
அக்டோபர் 2007

பிள்ளை பெத்தான் விளை
(ஒரு தெலுங்கு நாட்டுப்புறக் கதை)
ச. தமிழ்ச்செல்வன்

பெரியசாமி உண்மையிலேயே ஊரில் பெரிய மனிதர். வயது 45 தான் ஆகிறது. ஆனாலும், உடல்வாகும் அவர் வேட்டி கட்டும் பாங்கும் மிரட்டலாக இருக்கும். காடுகரையும் நிறைய இருப்பது கூடுதல் தோரணை. அதனால், ஊரில் அவருக்கு தனி மரியாதை. நிமிர்ந்த நடை, எல்லார் மீதும் மெளனமாக அதிகாரம் செலுத்தும் பார்வை. அவருடைய பார்வை பட்டதும் ஊர்மக்கள் கையெழுத்துக் கும்பிட்டு விடுவார்கள். வீட்டிலும் அவர் பெரிய மனுச தோரணையுடன்தான் இருப்பார். வயக்காட்டுக்குப் போகும்போதும் சரி வீட்டில் இருக்கும்போதும் சரி. சாரதி வேட்டி வெள்ளைச் சட்டையைக் கழட்டாமல்தான் இருப்பார்.

அவருக்கு வாழ்க்கையில் ஒரே குறை தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பதுதான். மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்தபோது அவர் ரெண்டு மாத காலம் மனைவியின் மூஞ்சியில்கூட முழிக்கவில்லை. பொம்பளைப் பிள்ளையாகப் பெத்துத் தாராளே என்று அவள்மீது ஆத்திரம். என்னைக்காவது ஆண்டவன் கண்திறக்க மாட்டானா என்ற நம்பிக்கை நாலாவதாகவும் பெண் குழந்தையே பிறந்தபோது உடைந்துபோனது. கொஞ்சநாள் கோவில், குளம் என்று தாடி வைத்துக் கொண்டு திரிந்தார்.

சக்கம்பட்டி ஜோசியர் பேச்சை நம்பி இறங்கிய கடைசி முயற்சியும் ஐந்தாவது பெண்குழந்தை பிறந்ததும் வீணானது. ஆகவே நிரந்தரமாக அவர் தன் மனைவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். என்ன பொம்பளை இவ. இப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கா என்று வெறுப்படைந்து போனார். கதை இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் அதிகாலையில் வயக்காட்டுக்கு போனார். அப்போது தூரத்தில் வரப்பின்மேல் ஏதோ வித்தியாசமாக ஒரு ஒளி தென்பட்டது. கிட்டப்போய்ப் பார்த்தார். அதிசயமான கல் ஒன்று ஊதா நிற ஒளியில் பளபளத்துக் கிடந்தது. ஒரு நிமிடம் பயந்தார். பிறகு குனிந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்தார். கண்கள் கூசின. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக்கல் பேசத் துவங்கியது.

“மகனே! நான் சூரியக்கடவுள், உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள். ஒரே ஒரு வரம் தருகிறேன். நீ கேட்டது உனக்குக் கிடைக்கும்”. பெரியசாமி ஆடிப்போனார். பயமும் பதட்டமுமாக கையில் கல்லுடன் நின்று கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் யோசிக்காமல் “எனக்கு ஆண் வாரிசே இல்லை. எனக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டும்” என்று கேட்டார். “தந்தேன். சீக்கிரம் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்” என்று சொல்லிவிட்டது. அந்தக்கல் மறைந்துவிட்டது.

நடந்ததெல்லாம் கனவா நிஜமா என்ற குழப்பம் ஒரு மாதம் வரை நீடித்தது. ஒரு மாதம் ஆகவும் அவருக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. மாத்திரைகளில் தலைசுற்று நிற்கவில்லை. எந்நேரமும் வாயில் எச்சில் ஊறியது. புளிச்புளிச் என்று கண்ட இடத்திலும் துப்ப ஆரம்பித்தார். ரெண்டு மாசம் ஆகவும் அவருடைய வயிறு பெரிதாகத் துவங்கியது. நாடி பிடித்துப்பார்த்து உள்ளூர் வைத்தியரும் அவர் “முழுகாமல்” இருப்பதாக அறிவித்தார்.

“ஆண்டவா... இது என்ன சோதனை. எனக்கு ஆண்பிள்ளை வேண்டும் என்று கேட்டேன். நீ எனக்கே கொடுத்து விட்டாயே”. பாதங்களில் வீக்கம் வந்து கஷ்டப்பட்டார். சாப்பிட்டதெல்லாம் ரெண்டு மாசத்துக்கு வாந்தியாகிக் கொண்டே இருந்தது. நாளாக நாளாக வயிறு உப்பிக்கொண்டே வந்தது. ஊரெல்லாம் இதே பேச்சுத்தான். கூட்டம் கூட்டமாக பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

சரி, இனி யோசிக்க ஒண்ணுமில்லை. தடுப்பூசி, சத்தான சாப்பாடு என்று அவருடைய மனைவி அவரை பக்குவமாகப் பார்த்துக் கொண்டார். பாவம் பெரியசாமி பிள்ளைத்தாய்ச்சிக்காரர் என்று ஊரில் யார் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் அவருக்கு ஒரு தட்டு நிறைய வந்துவிடும். அவரும் தன்னுடைய மகன் நல்லா வளரட்டும் என்று தீவனத்தில் குறை வைக்காமல் வெளுத்து வாங்கினார்.

பிரசவ காலம் நெருங்கியது. ஊரில் பயிற்சி பெற்ற செவிலியர் யாரும் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. உடடினயாக தந்திகள் பறந்தன. கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்தார்கள். ரெண்டு செவிலியர் வந்து டூட்டியில் சேர்ந்தனர். பல காலமாக அந்த ஊரில் சகஜமாக இருந்த பிரசவ மரணம் இப்போது நின்றது.

பெரியசாமிக்கு இடுப்புவலி கண்டது. கொஞ்ச நேரத்தில் “குவா குவா” சத்தம் கேட்டது. பெரியசாமிக்கு பாரம் குறைந்தது. எப்படியோ நல்லபடியாக தகப்பன் வேறு பிள்ளை வேறாக ஆகிவிட்டோமே அதுபோதும் என்றிருந்தது. பத்து மாதம் பட்ட அவஸ்தைகள் முடிவுக்கு வந்தது. ஆனால் என்ன கொடுமை. பிறந்தது பெண் குழந்தை. பெரியசாமி தலையணையில் முகம் புதைத்து அழுதார். அவருடைய மனைவி “அதுக்கென்னங்க... என்ன பிள்ளையானா என்ன.. எல்லாம் ஒண்ணுதானே” என்று அவருடைய தலையை வாஞ்சையுடன் வருடி தைரியம் சொன்னார்.

அன்று இரவு பெரியசாமியின் கனவில் கடவுளின் குரல் கேட்டது. “ஒரு சின்னதப்பு நடந்து போச்சு பெரியசாமி. கவலைப்படாதே அடுத்த குழந்தை உனக்கு ஆண் குழந்தை தான் இந்தா வரம்” என்றது. ஐயையோ... வேண்டாம்... வேண்டாம்... இருக்கிற பிள்ளைகள் போதும்... இன்னொரு பிரசவம் என்னாலே தாங்கமுடியாது. என் மனைவிக்கு நான் செஞ்ச கொடுமை புரிஞ்சிடுச்சு.... வேண்டாம்... வேண்டாம்” என்று கத்தி கட்டிலிலிருந்து அவர் கீழே விழவும் கனவு கலைந்து போனது.


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


Warning: include() [function.include]: URL file-access is disabled in the server configuration in /home/content/k/e/e/keetrucom/html/puthiyathendral/oct07/tamilselvan.php on line 104

Warning: include(http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/puthiyathendral/oct07/tamilselvan.php&pid=) [function.include]: failed to open stream: no suitable wrapper could be found in /home/content/k/e/e/keetrucom/html/puthiyathendral/oct07/tamilselvan.php on line 104

Warning: include() [function.include]: Failed opening 'http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/puthiyathendral/oct07/tamilselvan.php&pid=' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/k/e/e/keetrucom/html/puthiyathendral/oct07/tamilselvan.php on line 104


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP