கொத்தடிமைக் கூலிகளாய் சீரழியும் தமிழச்சிகள்
மரு த. இராஜேந்திரன்
சுமங்கலி திட்டம் திருமகள் திட்டம் ஈஸ்வரி திட்டம் போன்ற பெயர்களை கேட்கும் போது மங்களகரமாகத்தான் ஒலிக்கின்றன. ஆனால், அதன் பின் உள்ள கொடிய சுரண்டலை அறிந்தாலோ நெஞ்சம் கொதிக்கிறது. ஏற்கனவே குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டி கொழிக்கும் பஞ்சாலைகள்தான் இந்த மங்களகரமான பெயர்களில் கொடுமைகளை அரங்கேற்றுகின்றன.
வறுமை, ஏழ்மையால் வாடும் தென்மாவட்டங்களைக் குறி வைக்கும் இடைத்தரகர்கள் மேற்கண்ட பெயர்களில் திருமணமாகாத இளம்பெண்களைக் குறி வைக்கின்றனர். சில ஆண்டுகள் ஒப்பந்த பணியாளர்களாக இவர்களைக் கொண்டு சென்று கொட்டடிகளில் அடைத்து அதன் பின்னர் கணக்கிட்டு மொத்தமாக 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை கொடுத்து ஊருக்கு அனுப்பிவிடுகின்றனர்.
அதன் பின் திருமணம் செய்ய அந்தத் தொகை உதவியாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், உண்மையில் இத்திட்டம் உதவியாக இல்லாமல் சுரண்டலாகவே உள்ளது. இதில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையும் பல பெற்றோர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. கல்லாமையும் வறுமையும் எவ்வளவு பெரிய சீரழிவிற்கு நம் தமிழ் மக்களைக் கொண்டு சென்றிருக்கின்றது.
திண்டுக்கல், திருப்பூர், உடுமலைப்பேட்டை, கோவை, ஈரோடு போன்ற ஊர்களில் உள்ள நூற்பாலைகளே இக்கொடுமையை அரங்கேற்றி வருகின்றன. நூற்பாலை ஊழியரான வெங்கடசாமி கூறுகிறார், “இவ்வாறு அழைத்து வரப்படும் இளம் பெண்களுக்கு மூன்றுவேளை உணவுடன் முதலில் நாளொன்றுக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதன் பின் 6 மாதம் ஒருமுறை 10 ரூபாய் கூடுதலாக அளித்து 55ரூபாய் வரை ஊதியம் அளிக்கின்றனர்.
சில தொழிற்சாலைகளில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது, பல அளிப்பதில்லை. சிலவற்றில் இலவச மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது. வேறு சிலவற்றிலோ சாதாரண காய்ச்சல், தலைவலி மருந்துக்குக் கூட ஊதியத்தில் கழிக்கின்றனர். ஆள் தட்டுப்பாடுள்ள ஆலைகளில் கட்டாயமாக கூடுதல் நேரம் பணிசெய்ய வேண்டியிருக்கும்”.
சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. சில தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்காக நலநிதி மருத்துவ உதவி போன்றவை முறையாக அளிக்கப்பட்டாலும் அதற்கான அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகள் யாவும் தொழிலாளர்களிடத்தில் அளிக்கப்படாமல் முதலாளிகளாலேயே வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு முறையான தொகைகள் எல்லாம் செலுத்தி கணக்கு வைக்கப்படும். ஆனால், அப்படியொன்று தமது பெயரில் இருப்பதே தொழிலாளர்களுக்குத் தெரியாது.
இது தவிர பாலியல் சுரணடல், மனநல பாதிப்பு, தற்கொலை, கொலை போன்ற நிகழ்வுகளும் பெரும் கொடுமைகளாக நிகழ்கின்றன. இப்படியெல்லாம் உழைப்பை உறிஞ்சிவிட்டு, இனி ஏதுமில்லை என்றளவில் சக்கையாக்கி வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர்.
குழந்தை உழைப்பு, கொத்தடிமைத்தனம் போன்றவற்றிற்கு இப்படி நவீனவடிவில் மேற் கொள்ளப்படும் கொத்தடிமைத் தனங்களில் இருந்தும் ஏதுமறியா, அப்பாவி உழைக்கும் மக்களை, குறிப்பாக குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|