காட்டு ராஜா நீடூழி வாழ்வாரா?
ஆதி வள்ளியப்பன்’
ஆபத்தில் கிர் காட்டு சிங்கங்கள்
ஆசிய சிங்கம் எனப்படும் Panthera leo persica கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடைசியாக வந்த தகவல்களின்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டுயிர் சரணாலயம் மற்றும் சுற்றப்புறக் காடுகளில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் மட்டும் 17 சிங்கங்கள் பலியாகியுள்ளன (உலகில் மொத்தம் எஞ்சியிருப்பதே 300தான். ஆசிய சிங்கங்கள் என்று அறியப்படுபவை கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன).
இதில் பாதி சிங்கங்கள் பலியானதற்குக் காரணம் கள்ள வேட்டைக்காரர்கள். சரணாலயத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள திறந்த கிணறுகளில் விழுவதாலும், இயற்கை காரணங்களாலும் எஞ்சிய சிங்கங்கள் இறந்துள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் தோண்டியுள்ள 10,000 கிணறுகள், சிங்கங்களின் சவக்குழிகளாக மாறி வருகினறன. பெரும்பாலான கிணறுகளில் சுற்றுச்சுவர்கள் இல்லை. இதனால் பல சிங்கங்கள், குறிப்பாக சிங்கக் குட்டிகள் இந்த கிணறுகளில் தவறி விழுந்து மூழ்கி தொடர்ந்து இறந்து வருகின்றன. பபரியா சரகத்தில் இறந்த 4 பெண் சிங்கங்கள், ஒரு ஆண் சிங்கம், ஒரு சிங்கக் குட்டி ஆகியவற்றின் நகங்கள், எலும்புகள், மண்டையோடுகள் திருடப்பட்டிருந்தன. சரணாலயத்தின் வெளிப்பகுதியான பாலிடானாவில் இறந்த இரண்டு ஆண் சிங்கங்களின் எச்சங்கள் கிடந்தன.
அதேநேரம், இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்காஷ்கல் என்ற நபரை குஜராத் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்தது. இந்த நபர் சிங்கத்தை கள்ள வேட்டையாடிய நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிறது. சரணாலயத்துக்கு அருகே உள்ள உனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து, மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா மற்றும் பிற சரணாலயங்களில் புலிகள் கொல்லப்பட்டதற்கு பின்னணியிலும் இவரே முக்கிய நபராக இருந்திருப்பார் என்று கருதப்படுகிறது.
காடுகளில் எஞ்சியுள்ள ஆசிய சிங்கங்களை ஏற்கெனவே பல பிரச்சினைகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், கள்ளவேட்டை மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இந்த அரிய வகை சிங்கங்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் பண்ணைவிலங்கு தொகை, நிலைத்ததன்மையில்லாத சுற்றுலா நடைமுறைகள் இந்த சரணாலயத்தின் மீது கடுமையான நெருக்கடியை சுமத்தி வருகின்றன.
ஆசிய சிங்கங்கள் எனும் இந்த வகை சிங்கங்கள் ஒரு காலத்தில் ஆசிய முழுவதும் இருந்தன. அதன் காரணமாகவே அவற்றின் அறிவில் பெயரில் பெர்சிகா (பெர்சியா) என்ற பெயரும் இருந்தது. ஆனால் அவற்றின் எஞ்சிய கடைசி சிங்கக் கூட்டம் கிர் காட்டில் மட்டும் தங்கிவிட்டது.
இதுபோல ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஓர் அரிய உயிரினம் வாழ்வது மிகவும் ஆபத்தானது. அவற்றை நோய் தாக்குவதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட ஒரே மரபணுக் குழுவுக்குள்ளேயே அவை மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்து வருவது, பெரும் கவலையளிக்கும் ஒரு அம்சம்தான். ஏனென்றால், இப்படிப்பட்ட நிலைகளில் மரபணுக் கோளாறுகள் அதிகரிக்கும். நோய்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படக்கூடும்.
நம் முன் நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கங்கள் அழிவது, நமக்கு எந்த வகையிலும் பெருமை தரக்கூடியது அல்ல.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|