தொலைபேசி மோசடி - ஈரோடு சாட்சியம்
தி. அமிர்தக்கொடி
ஈரோடு மாவட்டம், தாராபுரம் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் அவர். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது வீட்டு தொலைபேசி ஒலித்தது. எடுத்து பேசினார். மறுமுனையில் இளமை ததும்பும் இனிமையான பெண் குரல்.
'வணக்கம், சார் இருக்காரா?'
பேசறேன். நீங்க..?
'வாழ்த்துகள் சார். ... நிறுவனத்தின்(பெயரைச் சொல்கிறார்) ஈரோடு பிராஞ்ச் ஆபீஸ்ல இருந்து பேசறோம். உங்க பகுதியில் நீங்க சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டிருக்கீங்க... மதிப்பிட முடியாத அழகிய அன்பளிப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. அன்பு மனைவியோட வந்து வாங்கிக்குங்க... உங்கள கவுரவிக்கறதுல மகிழ்ச்சி அடையறோம். வசதியான தேதியையும், நேரத்தையும் சொன்னீங்கன்னா, நாங்க காத்திருக்கறோம்Õ என்ற அன்பு கட்டளையோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மகிழ்ச்சியான செய்தியை தனது மனைவியிடம் கூறினார். எந்த தேதியில் போய் 'அன்பளிப்பை' பெறலாம் என யோசிக்க துவங்கினர். சற்று நேரத்தில் மீண்டும் தொலைபேசியில் அதே குரல். இப்படி அன்று முழுவதும் 6 தடவை போன் வந்தது.
கடைசியில் ஒரு நல்ல நாளாக பார்த்து முடிவு செய்து தேதியையும், நேரத்தையும் தெரிவித்தனர். கவுரவம் செய்ய அழைக்கும்போது பேருந்தில் போனால் மரியாதை இருக்காது என நினைத்து, குறிப்பிட்ட தேதியில், ஈரோட்டில் உள்ள அந்த அலுவலகத்துக்கு மனைவியுடன் காரில் போய் இறங்கினார், அவர்.
அந்த அலுவலகத்தில் ஏராளமான இளம்பெண்கள் இருந்தனர். வரவேற்பு ஹாலில் நிறையபேர் காத்திருந்தனர். உள்ளே சென்ற தம்பதியை இளம்பெண்கள் இனிதே வரவேற்று தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு 'அதிகாரி' கெட்டப்பில் மேலும் சில இளம்பெண்கள்.
இருக்கையில் அமர்ந்த தம்பதியிடம், முகவரி, வியாபாரம், எவ்வளவு வருமானம், எந்தெந்த வங்கிகளில் கணக்கு இருக்கிறது என அவர்களது ஜாதகத்தையே புட்டுபுட்டு வைத்தனர்.
சற்றே மிரண்டு போன தம்பதிகளிடம், ‘உங்களுக்குப் போதிய வருமானம் இருக்கிறது. இன்சூரன்ஸ் பாலிசி போடுங்கள். உங்கள் வருமானத்தை பலமடங்கு பெருக்கலாம்' என ஆரம்பித்தனர். அவருக்கு விஷயம் புரிந்தது.
பல்வேறு வகை பாலிசிகளை பற்றி இனிக்க இனிக்க பேசி வற்புறுத்தினர். அவரோ கறாராக மறுத்துவிட்டார். இனி இவரிடம் பாலிசி பெற முடியாது என முடிவு செய்த இளம்பெண்கள், உங்களுக்காக நாங்கள் செய்த போன் செலவு என கூறி ரூ.460ஐ கட்டுப்படி பில்லை காட்டினர்.
கடுப்பான அவர், 'சிறந்த மனிதர், அன்பளிப்பு என்றெல்லாம் சொன்னீர்களே' என ஆவேசமாக கேட்டுள்ளார்.
'ஓ.. அன்பளிப்பும் உண்டு’ என கூறி அழகாக பொதியப்பட்ட பெரிய பொதி ஒன்றை அவரிடம் திணித்தனர். அதை அங்கேயே பிரித்து பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தையும் கட்டிவிட்டு தொங்கிய முகத்துடன் அறையில் இருந்து வெளியேறினர் தம்பதியர்.
வெளியே தாராபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 60 பேர் 'கவுரவத்திற்காக’ காத்திருப்பதை கண்டனர்.
யார் கண்ணிலும் படாமல் உடனே காரில் ஏறி பறந்தனர்.
வீட்டுக்கு சென்று பொதியை பிரித்தனர். அதில் 50 ரூபாய்கூட பெறாத பெரிய பிளாஸ்டிக் டப்பா ஒன்று இருந்தது.
‘வெளியே சொன்னால் வெட்கக்கேடு’ என்பதால் அத்தோடு அமைதியாக இருந்துவிட்டனர். இதுபோல் ஏமாந்த பலர் பற்றி தகவல் பரவவே, அவரும் வெளியில் சொல்லும் நிலை ஏற்பட்டதாம் தொலைபேசி, காவல்துறைகள் திட்டமிட்டு செயல்பட்டு இத்தகைய மோசடி கும்பல்களை கைது செய்ய வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|