தனியார் கையில் நகராட்சி பூங்கா
ஆர். எஸ். லால்மோகன்
பூங்காக்கள் கடவுள் மனிதனுக்கு கொடுத்த அன்பளிப்பு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறி 'பூங்காக்கள் நகரங்களின் நுரையீரல்' என்று பூங்காக்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்று 'இந்த நுரையீரல்' எப்படி பேணப்படுகிறது?
நாகர்கோவிலில் உள்ள சி.பி. இராமசாமி பூங்கா சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர் முயற்சியால் 65 லட்சம் ரூபாய் செலவில் 2003ல் சீரமைக்கப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்த நகராட்சி, பலரும் எதிர்த்த போதிலும் பூங்காவை நகராட்சியில் வேலை செய்யும் ஒருவருக்கு பினாமியாக 23,000 ரூபாய்க்கு ஏலத்தில் கொடுத்தனர். இதை இந்த ஆண்டு 15 லட்சம் ரூபாய்க்கு ஜெய்சிங் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். 2003ல் ரூ. 23000க்கு ஏலம் சென்ற பூங்கா 2007-ல் ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் போனது. நகர் மக்கள் அனைவரையும் ஆச்சரியத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியது.
நகராட்சி ஆணையர் காதிர் மொய்தீன் சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாக ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், ‘ஆய்வின் போது பூங்காவை பார்வையிட்டதில் பூங்கா பராமரிப்பு மனநிறைவையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது’ என்றும் ‘மின் கட்டணத்தை குத்தகைதாரர் கட்டுகிறார் என்றும் ‘தனியாருக்கு பூங்காவை கொடுக்க தவறினால் நகராட்சிக்கு பண இழப்பு ஏற்படும்’ என்றும் ‘தற்போது வாசிப்பு சாலையில் இருந்து பூங்கா உபயோகத்தை தவிர வேறு இதர காரணங்களுக்காக மின் இணைப்பு எடுக்கப்படவில்லை’ என்றும் ஒரு அப்பட்டமான பொய் தகவலை அனுப்பியுள்ளார்.
ஆனால் (நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர்) து. சந்திரசேகர், தனது ஆய்வு அறிக்கையில் பூங்கா பராமரிக்க கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை தொகை (ரூ. 23000) மிக குறைவென்றும் இந்த தொகை நிர்ணயித்த நகர்மன்ற தீர்மானத்தை ரத்து செய்யலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார். இதன் நகல் நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பூங்கா குத்தகை தொடர்பான விளம்பரம் முறையாக செய்யப்படவில்லை என்று மண்டல இயக்குநர் நாகர்கோவில் ஆணையர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குநர் அபுஜ் சர்மா, உரிமைதாரர் சி.பி. ஆர். பூங்காவில் மின் விளையாட்டு பொருள் வைத்துள்ளனர், திரைப்படம் காட்டப்படுகிறது. மின்கட்டணம் உரிமைதாரருக்கு பதிலாக நகராட்சியால் கட்டப்படுகிறது. நுழைவு கட்டண சீட்டு நகராட்சி முத்திரை இல்லாமல் கொடுக்கப்படுகிறது, கம்யூட்டர் விளையாட்டுகள், தேனீர் கடைகள், மின்சாரத்தில் இயங்கும் கார் முதலியன சட்ட மீறுதலாக இயக்கப்படுகிறது. ஆதலால் உரிமைதாரரின் உரிமையை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாகர்கோவில் நகராட்சி ஆணையரிடம் கேட்டதோடு, சில வழிகாட்டல்களையும் பரிந்துரைத்துள்ளார்.
2005 செப்டம்பரில் அதில், 'நகராட்சியே ஒப்பந்த முறையில் ஆள் வைத்து கட்டணத்தை வசூலித்து பூங்காவை பராமரிக்கலாம்' என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சுதர்சன் சௌ திரியும், அசாக் குமாருக்கு பூங்கா உரிமத்தை கொடுக்க கூடாது என்றும், பூங்காவில் மின் விளையாட்டுகள் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் நகராட்சி மூலம் பூங்காவை நடத்த வேண்டியுள்ளனர்.
அக்டோபர் 2005ல் நகராட்சியும் சி.பி.ஆர். பூங்காவில் மின்சாரம் மூலம் விளையாட்டுகள் அமைக்க குத்தகைதாரர் அசோக குமார் செய்த விண்ணப்பத்தை ரத்து செய்தது. ஆனால் இந்நாள் வரை பூங்காவின் உள்ளே அனுமதி இன்றி மின்சாரம் மூலம் விளையாட்டு கருவிகள் அமைத்து பயன்படுத்தி வருகிறார்.
சட்ட மீறுதலாக மின் இணைப்புகள், மின்விளையாட்டு கட்டணம் டோக்கன் முறையில் வசூலிப்பது, சட்ட விரோதமாக கடை வைப்பது, மின் விளையாட்டுகளுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுமதி பெறாதது, பூங்காவின் உள்ளே வாகனங்களை நிறுத்தி அதற்கு கட்டணம் வசூல் செய்வது, திறந்த வெளி அரங்கில் சினிமா காண்பிப்பது போன்ற செயல்களை பூங்காவில் செய்ததால் அசோக குமாரின் உரிமத்துவத்தை ரத்து செய்து அவரை வெளியேற்ற நகராட்சி ஆணையர் சவுதிரி ஆணையிட்டார். ஆனால் அசோக குமார் தனக்கு 31-03-2007 வரை பூங்காவை பராமரிக்க உரிமை உண்டு என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவை பெற்று வெளியேறாமல் இருந்தார். இந்த வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டது.
பூங்காவின் உள்ளே நூல் நிலையம் இருக்கிறது. இதற்கு 2.5 லட்சம் ரூபாயில் ஒரு அகன்ற நுழைவு வாயில் 2003ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று கேப்ரோட்டில் இருந்து ரூ.2.5 லட்சம் செலவழித்து ஒரு புதிய பாதை உருவாக்கப்பட்டு வாசிப்பு சாலையின் பின்பாகம் அரசு அங்கீகாரம் இன்றி உடைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் வாசிப்பு சாலையையும் பூங்காவையும் பிரித்து பூங்காவை உரிமைத்தார் தனது கைவசப்படுத்துவதுதான். இதற்காக அரசு பணம் ரூ.2.5 லட்சம் வீணடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது 'கட்டி முடிக்காத கட்டிடத்தை' கட்டி முடித்தாகி விட்டது என்று பொய் வாக்கு மூலம் நகராட்சி கொடுத்துள்ளது.
இவ்வளவு சட்ட மீறுதல்களை செய்தும் அவருக்கே பூங்கா பராமரிப்பை கொடுக்கலாம் என்று நகர்மன்ற ஆணையர்கள் கூறுவது சட்ட விரோதமாகும். இதனால் பொதுநன்மை பலியிடப்படுகிறது. அதோடு, நகர் மன்றமும், நகர்மன்ற ஆணையர் காதிர் மைதீனும் ஒப்பந்தகாரருக்கு ஆதரவளித்து செயல் படுவதால் பல வழக்குகளில் 'எக்ஸ்பார்ட்டி' ஆகி நகராட்சிக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு கிடைக்க வழிவகுத்துள்ளது.
பூங்காவில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள்
1. மின்துறையோ, நகராட்சி அனுமதியின்றி மின் விளையாட்டு கருவிகளான மின் சிற்றுந்து, மின் ஹெலிகாப்டர், மின் தவளை வைத்திருப்பது.
2. மின் விளையாட்டுகளில் பெறப்படும் வசூலை நகராட்சிக்கு கொடுக்காதது.
3. மின் விளையாட்டுகளுக்கும் மற்ற விளையாட்டுகள் (வீடியோ, துப்பாக்கி சூடுதல்) வசூல் டோக்கன் முறையில் கட்டணம் வசூல் செய்து பொதுமக்களுக்கு ரசீது கொடுக்காதது.
4. வாசிப்பு சாலையில் இருந்து மின் இணைப்பு பெற்றும், மின் விளையாட்டு களுக்கு நகராட்சியை மின் கட்டணம் செலுத்த வைப்பது, இதற்கு நகராட்சி துணை செய்வது.
5. பூங்காவின் உள்ளே அனுமதி, உரிமம் இன்றி சிற்றுண்டி சாலை, வணிக கடை வைத்திருப்பது.
6. பூங்காவின் புல்தரைகளை பூபந்து விளையாட அனுமதித்து அழித்தது.
7. பூங்காவின் உள்ளே குரங்கு போன்ற வனவிலங்குகளை வன இலகா அனுமதி இன்றி அனுமதித்தது.
8. விஷ மருந்து வைத்து ஒரு பெரிய புளி மரத்தை வீழ வைத்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்தது.
9. பூங்காவை தனியாருக்கு கொடுக்க கூடாது என்றும் பூங்காவில் நடக்கும் சட்ட மீறுதல், பொது நன்மையை முன்னிட்டு அம்பலப்படுத்தும் பொதுநல வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயல்வது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|