புலியிய புராணம்
இலக்கியா
அழிவில் புலிகள்
இந்தியாவைப் பொறுத்தளவில் பொதுவாக வட இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்படுவது அதிகம். கொல்லப்பட்ட புலிகளின் உடல் பாகங்கள் சீனாவுக்கு கடத்தப்படுகின்றன.
ஆனால் தென்இந்தியாவில் புலிவேட்டை அந்தளவுக்கு இல்லை. ஆனால், புலிகளின் இரையான மான்கள், காட்டுமாடுகள், பன்றி, மிளா போன்றவற்றை காடுவாழ் மக்களோ அல்லது பிறரோ இறைச்சிக்காக கொன்றுவிடுவதால் புலிகள் இரையின்றி வாழுகின்றன. ஒரு புலிக்கு ஒரு ஆண்டுக்கு 50 புள்ளிமான்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
காடானது மனித ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாலும் புலிகள் போன்றவை அச்சுறுத்தப்படுவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவற்றோடு வனத்துறைக்கு போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது கானுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோள்.
சீனாவின் புலிப்பண்ணைகள்
சீனாவில் தற்போது 5,000 புலிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. (உண்மையாகத்தான் நாம் கறிக்கோழிகள், பன்றிகள், ஆடுகளை வளர்ப்பதுபோல சீனாவில் புலிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன).
தம்மால் சுமார் ஒரு இலட்சம் புலிகளை இவ்வாறு வளர்க்க முடியும் என்றும் அதன்மூலம் ஆண்டுக்கு 10,000 புலிகள் கிடைக்கும் என்றும் அவற்றின் உடல்பாகங்களை சீன மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுவதால் காட்டுப்புலிகளும் வெள்ளைப்புலிகளும் பாதுகாக்கப்படும் என்று சீனர்கள் சொல்கிறார்கள்.
கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் புலிகளின் உடல் பாகங்களை விற்பதற்கு பன்னாட்டுத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதனை நீக்கவேண்டும் என்ற குரல்கள் சீனாவில் எழுந்துள்ளன.
ஆனால், கறிக்கோழி வேண்டுமா, நாட்டுக்கோழி வேண்டுமா என்று கேட்டால் சுவை, வீரியம் அதிகமானதாக நம்பும் நாட்டுக் கோழியையே விரும்பும் மக்கள். அதிக வீரியம் என்று நம்பி காட்டுப்புலிகளுக்கு அதிக பணம் கொடுக்க முன்வரலாம் என்றும் எனவே இது காட்டுப்புலிகளை பாதுகாக்க உதவாது என்றும் வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சிங்கத்திற்கும் ஆபத்துதான்!
இதோடு, தொடர்புடையது என்பதால் புலியிய புராணத்தில் சிங்காயணமும். இந்தியாவில், குஜராத்திலுள்ள கிர் காடுகளில் மட்டுமே தற்போது சிங்கங்கள் காணப்படுகின்றன. சிங்கங்களும் சட்டவிரோத வேட்டைக்கும் பல்களால் வேட்டையாடப்பட்டே வருகின்றன. ஆனால், கிர் காட்டுப்பகுதியில் சிறுகுன்றுகள் மட்டுமே இருப்பதாலும், அதன் நில அமைப்பு கண்காணிக்க எளிதாக இருப்பதாலும் அங்கு நடைபெறும் வேட்டையை முயன்றால் எளிதில் தடுக்கமுடியும் என்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடப்பட்டு, வெறும் 20 அல்லது 30 சிங்கங்களே இருந்த நிலையில் ஜுனாகர் நவாப் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக இப்போது கிர் காட்டில் சுமார் 300 சிங்கங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டுமானால், இந்தியாவின் வேறு சில காட்டுப் பகுதிகளுக்கும் சிங்கங்களை இடம் மாற்றியாக வேண்டும் என்ற திட்டம் தற்போது முன்வைக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 1994ல் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு காப்பகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் அங்கிருந்த 3000 சிங்கங்களில் 1000 சிங்கங்கள் இறந்தனவாம். இவ்வளவுக்கும் அது 30,000 சதுர கி.மீ பரப்புடைய விரிந்த காட்டுப்பகுதி. ஆனால், கிர் காட்டுப்பகுதியோ வெறும் 1400 ச.கி .மீட்டர் மட்டுமே.
எனவே அத்தகைய நோய் தொற்றுகள் ஏற்பட்டால் சிங்க இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்நோய்கள் ஊர்ப்புற நாய்களால் பரவலாம் என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள சுமார் 400 ச.கீ. மீட்டர் பரப்புடைய காட்டில் சிங்கங்களை விட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாம்.
சீனப் புலிக்குப் பயிற்சி
சீனாவின் வடகிழக்கில் உள்ள இனப்பெருக்க மையத்தில் கடந்த மார்ச் மாதம் வரை 84 சைபீரியப் புலிகள் பிறந்துள்ளன. தற்போது மேலும் 13 புலிகள் கருவுற்று இருப்பதால் வரும் அக்டோபர் மாதவாக்கில் மேலும் 20 முதல் 30 புலிக்குட்டிகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக அரியவகை விலங்கினங்களில் ஒன்றான சைபீரியப் புலிகள் இரசியாவின் சைபீரியப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படுபவை. தற்போது உலகின் காட்டுப் பகுதியில் அதிகபட்சம் 400 புலிகள் மட்டுமே உள்ளனவாம். அவற்றில் 20 சீனாவிலும் எஞ்சியவை இரசியாவிலும் உள்ளன.
புலி வகைகளில் பெரிதான சைபீரியப் புலிகள் 600 பவுண்ட் வரை எடை உடையவை. மனிதர்கள் புலிகளின் வாழிடங்களை ஆக்கிரமித்து விட்டதாலும், பாரம்பரிய சீன மருத்துவத்தில் அவற்றின் தோல், எலும்பு போன்றவை பயன்படுத்தப்படுவதாலும் வேட்டையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன.
தற்போதுள்ள சைபீரியப் புலிக் குட்டிகளுக்கு காட்டில் வாழ்வதற்கான பயிற்சியளித்து காட்டில் விட்டுவிட சீனா முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் எங்க இருக்கேன்?
இவை, இப்படியிருக்க, நெல்லை மாவட்டத்தில் வேறொரு சர்ச்சை. நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு புலிகள் காப்பகத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் முடிவில் 30 புலிகள் இருப்பதாக, அறிவிக்கப்பட்டது. அவற்றின் காலடித்தடம், எச்சத்தை பயன்படுத்தி இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், களக்காடு மலையில் இப்போது புலிகளே இல்லை. சிறுத்தைகள் தான் நிறைய உள்ளன என்று சிலர் சொல்லத் தொடங்க, வீறுகொண்டு எழுந்தனர் வனத்துறையினர்.
சில நாய்களையும் அழைத்துக்கொண்டு, கையில் புகைப்படக் கருவியோடு காட்டுக்குச் சென்ற வனத்துறையினர், குறிப்பிட்ட சில இடங்களில் நாயை கட்டிவிட்டு, பரண்மேல் ஏறி கேமராவும் கையுமாக வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர் - புலியை புகைப்படம் எடுத்து உறுதிபடுத்த, ஆயிற்று 10 நாட்களுக்கு மேல். புலிகள் ஏதும் புகைப்படத்தில் சிக்கியதாக தகவல் ஏதும் இல்லை. அய்யா சொல்லுங்கையா... களக்காட்டுல புலி இருக்கா இல்லியா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|